பொங்கியெழுந்தார் கலைஞர், ராமதாஸ் மீது பாய்ச்சல்

பா.ம.க. தலைவர் ராமதாசின் போக்குக்கு முதலமைச்சர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

நீங்கள் சொல்லும் புகார்களை கேட்டுக் கொண்டு சும்மா இருக்க வேண்டுமா? மகளிர் பேரணி தேவை இல்லை என்றால் அந்த பேரணிக்கு ஏன் வந்தீர்கள்? என்று கருணாநிதி காட்டமாக கேட்டார்.

குறைகள் இருந்தால் என்னிடம் சொல்ல வேண்டியது தானே, ஏன் அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் கருணாநிதி கேட்டார்.

இத்தகைய போக்கு, அறிக்கைகள் இரு கட்சித் தொண்டர்கள் இடையே பகையை ஏற்படுத்தும். பின்னர் இரு தரப்பினரிடையே ஒற்றுமை ஏற்படுத்துவது சிரமம் என்றும் கருணாநிதி எச்சரித்திருக்கிறார்.

அமைச்சர் பொன்முடியின் உயர்கல்வி இலாகா அலங்கோலமாகி விட்டது. சுயநிதி கல்லூரிகளில் நடைபெறும் கல்வி கட்டண கொள்ளையை தடுக்க நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்று அமைச்சர் பொன்முடி மீது குற்றஞ்சாட்டி கடந்த சில நாட்களாக ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு வருகிறார். அதற்கு அமைச்சர் பொன்முடி பதில் அளித்து வருகிறார். இரண்டு பேரும் அறிக்கை போர் நடத்தினார்கள். இந்த நிலையில் நேற்று உச்சகட்டமாக சென்னையில் கலெக்டர் அலுவலகம் எதிரே தொண்டர்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்திய ராமதாஸ், பொன்முடி மீது கடுமையாக தாக்கினார். அவர் எப்போது நிதானமாக இருப்பார்; எப்போது நிதானம் இல்லாமல் இருப்பார் என்பது எல்லோருக்கும் தெரியும் என்று ராமதாஸ் காட்டமாக கூறினார்.

இதுபோன்று நிலைமை மிகவும் மோசமாக போய்க் கொண்டிருந்த நிலையில் இன்று கருணாநிதி ஓர் அறிக்கை வெளியிட்டார்.



அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது::

நேற்றைய தினம் (2-7-2007) உயர்கல்வித் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தி, அதில் கலந்து கொண்டு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருந்த கருத்துக்கள் எனது கவனத்திற்கு வந்ததைத் தொடர்ந்து சட்டமன்ற பா.ம.க. தலைவர் கோ.க. மணி யோடு தொடர்பு கொண்டு, நான் கேட்ட போது, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்த கருத்துக்களை முழுமையாக வெளியிடாமல் திரித்தும் குறைத்தும் ஏடுகளில் வெளியிட்டிருப்பதாகவும், அவர் தெரிவித்த கருத்துக்களைப் பற்றிய விளக்கத்தை அறிக்கையாக பத்திரிகைகளுக்கு தரப் போவதாகவும் என்னிடம் தெரிவித்திருந்தார். ஆனால் இன்று காலைப் பத்திரிகைகளில் நேற்று மாலைப் பத்திரிகைகளில் வந்த அதே செய்திகள் வந்திருப்பதோடு, கோ.க. மணி வெளியிட்ட அறிக்கையிலும் முழுமையான விவரங்கள் தெரிவிக்கப் படாததால், தோழமைக் கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் இந்த விளக்கத்தை வழங்கிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

உறவு கெடும் நிலை

கடந்த சில நாட்களாகவே பா.ம.க. நிறுவனர், டாக்டர் ராமதாஸ் பொதுவாக கழக அரசைப் பற்றியும், குறிப்பாக உயர் கல்வித் துறையைப் பற்றியும் தொடர்ந்து அறிக்கை விடுவதும், அதற்கு அந்தத் துறைகளின் அமைச்சர்கள் விளக்கம் அளிப்பதும் தோழமைக் கட்சிகள் இடையே உள்ள நல்லுறவைக் கெடுப்பதாக அமைந்து விடுமோ என்ற எண்ணத்தைப் பரவலாக ஏற்படுத்தியுள்ளது.

சுயநிதிக் கல்லூரிகள் அதிகக் கட்டணம் வசூலிப்பது குறித்து கடந்த ஆட்சியில் 20 முறைக்கு மேல் போராட்டம் நடத்தியதாகவும், இந்தப் போராட்டம் 27வது போராட்டம் என்றும் டாக்டர் ராமதாஸ் அறிவித் திருக்கின்றார்.

ஆதாரத்தை தரவேண்டியது தானே?

கடந்த ஆட்சியானாலும், இந்த ஆட்சி யானாலும் சுயநிதிக் கல்லூரிகள் அதிகக் கட்டணம் வாங்குகின்றார்கள் என்றால், அதன் மேல் நடவடிக்கை எடுப்பதற்கு அந்த சுயநிதிக் கல்லூரிகள் அதிகக் கட்டணம் பெற்றதற்கான ஆதாரம் வேண்டுமல்லவா என்றுதான் அந்தத் துறையின் அமைச்சர் பொன்முடி திரும்பத் திரும்பக் கேட்கிறார். டாக்டர் அவர்களே, தானே இதற்கான முயற்சியை எடுத்துக் கொண்டு, இதற்கான ஆதாரத்தை தோழமைக் கட்சி என்ற முறையிலே பெற்றுத் தருவாரானால், அதற்கு சட்டப்படி மாநில அரசினால் எத்தகைய நடவடிக்கை எடுக்க முடியுமோ அதனை எடுக்க நான் தயாராக இருக்கின்றேன் என்ற உறுதியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுயநிதிக் கல்லூரிக்கு ஆதரவாக இல்லை

சுயநிதிக் கல்லூரிகளுக்கு ஆதரவாக இந்த அரசு நடக்கவில்லை. அரசுக்கும், சுயநிதிக் கல்லூரிகளுக்கும் இடையே வழக்கே நடைபெற்று நேற்றுதான் அதில் அரசுக்கு சார்பான தீர்ப்பு கிடைக்கப் பெற்றுள்ளது. அந்தத் தீர்ப்பைப் பற்றி கோ.க.மணி இன்று வெளியிட்ட அறிக்கையில் வரவேற்று பாராட்டியிருப்பது மகிழ்ச்சி தரக் கூடியதாகும். இந்த அரசைப் பொறுத்த வரையில் மாணவர்கள் நலன்களைக் காப்பதில் யாருக்கும் சளைத்தது அல்ல.

மாணவர்களின் நலன்களை விட சுயநிதிக் கல்லூரி உரிமையாளர்களின் சொந்த நலனை பற்றி இந்த அரசு என்றைக்கும் கவலைப் பட்டது கிடையாது. அதனால் தான் பொறுப்பேற்ற முதல் ஆண்டிலேயே நுழைவுத் தேர்வினை ரத்து செய்திருக்கிறோம். அது மட்டுமல்லாமல் மூன்று பல்கலைக் கழகங் களையும் நான்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளையும் தொடங்கியிருக்கிறோம். டாக்டர் ராமதாஸ், அமைச்சர் பொன்முடி தவறே நடக்கவில்லை என்று கூறுவதாக பேசியிருக்கிறார். தவறே நடக்கவில்லை என்று அமைச்சர் எப்போதும் கூறவில்லை. நடப்பதற்கான ஆதாரத்தையும், புகாரையும் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்தால் தானே நடவடிக்கை எடுக்க இயலுமென்று தான் அமைச்சர் பொன்முடி சொல்லி வருகிறார்.

அன்புமணியிடம் தானே அதிகாரம் உள்ளது

சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் கொள்ளை அடிப்பதாகவும் பா.ம.க. நிறுவனர் கூறுகிறார். சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யக் கூடிய அதிகாரம் மத்திய அரசின் அமைச்சர் அன்புமணியின் பொறுப்பிலே உள்ள இந்திய மருத்துவக் கவுன்சிலிடம்தானே உள்ளது.

அங்கீகாரத்தை அவர் ரத்து செய்ய வேண்டுமென்றாலும், அவரிடம் புகார் கொடுத்தால் தானே நடவடிக்கை எடுக்க இயலும்.

"தோழமையுடன் இருக்கும் நாம், இந்த ஆட்சியிலும் போராட வேண்டுமா?'' என்று டாக்டர் ராமதாஸ் பேசியிருக்கிறார். இதைத் தான் நானும் கேட்கிறேன்.

கேட்டுக் கொண்டு சும்மா இருக்க முடியுமா?

ஜெயலலிதா ஆட்சியை விட உயர் கல்வித் துறை அமைச்சகம் மிகவும் மோசமாக உள்ளது என்று அறிக்கை விடுத்தால் அதையும் கேட்டுக் கொண்டு தோழமைக் கட்சி கூறுகிறது என்பதற்காக விளக்கம் சொல்லாமல் இருக்க முடியுமா? இன்னும் சொல்லப் போனால் ஜெயலலிதா ஆட்சியில் உயர் கல்வித் துறை அமைச்சகம் என்ற ஒன்றே கிடையாது. ஆனால் அதை விட தற்போது மோசம் என்று ஒரு தோழமைக் கட்சியின் தலைவர் வெளிப்படையாக விமர்சனம் செய்வதுதான் முறையா?

ஜூலை 1ம் நாள் சென்னையில் நடை பெற்ற மகளிர் பேரணி பற்றி செய்தி யாளர்களிடம் அவர் பேசும்போது கூட, டாக்டர் ராமதாசுக்கும் மற்றும் கூட்டணி தலைவர்களுக்கும் தரையில் மேடை அமைத்து அமர வைத்ததாகவும், அதற்கு அருகில் உயர்ந்த மேடையில் மற்றவர்கள் அமர்ந்திருந்தனர் என்றும் குறையாகச் சொல்லியிருக்கிறார். உயர்ந்த மேடை என்று அவர் கூறுவது பிரதிபா பட்டீலும், நானும் அமர்ந்த இடத்தைத் தான் குறிப்பிடுகிறார்.

மத்திய அரசிடம் கேளுங்கள்

ஜனாதிபதி போன்ற பெரும் பொறுப்புக்கு வரக் கூடியவரை ஏராளமானவர்களுக்கு மத்தியிலே மேடையிலே அமர வைக்கக் கூடாது என்பது பாதுகாப்புத் துறையின் கண்டிப்பான ஆணையாகும். பதவிக்கு வரும் முன்பே ஜனாதிபதிக்கான பாதுகாப்பா? என்று டாக்டர் கேட்டிருக்கிறார். அது எங்களிடம் கேட்க வேண்டிய கேள்வியல்ல. பா.ம.க.வும் அங்கம் வகிக்கும் மத்திய அரசிடம் கேட்க வேண்டிய கேள்வி.

மேலும் அனைத்துத் தோழமைக் கட்சிகளின் சார்பில் பேரணி நடைபெறும் என்றும், அதனை நானும் பிரதீபாவும் பார்வையிடுவோம் என்றும் தான் அறிவிக்கப்பட்டிருந்தது. மற்றக் கட்சிகளின் தலைவர்கள் வந்தால் அமருவதற்காகவே மற்றொரு மேடையும் அருகிலேயே அமைக்கப்பட்டு, அந்த மேடையில் தான் கழகத்தின் பொதுச் செயலாளரும், என்னை விட வயதில் மூத்தவருமான பேராசிரியரும், காங்கிரஸ், பா.ம.க., சி.பி.எம். சி.பி.ஐ., விடுதலை சிறுத்தைகள், முஸ்லீம் லீக், உழவர் உழைப்பாளர் கட்சி, சமூக நீதி இயக்கம் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் அத்தனை பேரும் அமர வைக்கப்பட்டிருந்தார்கள்.

எனது மனைவி, அமைச்சர்கள் நின்றார்கள்

இன்னும் சொல்லப் போனால், அந்தத் தலைவர்கள் அமர்ந்திருந்த புகைப்படத்தைப் பார்த்தாலே அங்கே எனது மனைவியும், உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்துவும், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சுதர்சனம், பீட்டர் அல்போன்ஸ், மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு, மாநில அமைச்சர்கள் மு.க. ஸ்டாலின், வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு ஆகியோரும் அமரக் கூட இடம் இல்லாமல் நின்று கொண் டிருப்பதைக் காணலாம்.

வெயில் அடித்ததாக குறை சொல்வதா?

பிரதிபா பட்டீல் பேரணியில் உரையாற்றி சென்றவுடன், நான் அமர்ந்திருந்த இடத்திற்கே அனைத்து தோழமைக் கட்சித் தலைவர்களையும் அழைத்து அமரச் செய்தேன். எதிர் வெயில் (மாலை வெயில் ஐந்தரை மணி அளவில்) தன் மீது அடித்தது என்றும் டாக்டர் குறைபட்டுக் கொண்டுள்ளார். அதே எதிர் வெயில் என் மீதும், பிரதீபா மீதும், மற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் மீதும் அடித்துக் கொண்டு தான் இருந்தது.

பேரணி தேவையில்லை என்று கூறி விட்டு ஏன் வந்தீர்கள்?

மேலும் இந்தப் பேரணியே தேவையில்லாத ஒன்று என்றும் பா.ம.க. நிறுவனர் பேசியிருக்கிறார். தேவையில்லாத பேரணிக்கு வந்து விட்டு, அதைப் பற்றி இத்தனை குறைகளையும் கூறுவது என்பது மனதிற்கு வேதனை தரக்கூடிய ஒன்றல்லவா என்பதை டாக்டர் எண்ணிப் பார்க்க வேண்டும்.

தென்னக மகளிரே திரண்டு வந்தது போல நடைபெற்ற பேரணியை தென்சென்னை மாவட்டக் கழகத்தின் சார்பில் மட்டுமே நடைபெற்ற பேரணி என்பதைப்போல டாக்டர் ராமதாஸ் குறிப்பிட்டிருப்பது, பேரணியிலே கலந்து கொண்ட அத்தனை கட்சிகளைச் சேர்ந்த மகளிரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்ந்து இவ்வாறு பா.ம.க. நிறுவனர் ஆளுங்கட்சியின் மீது ஏதாவது குற்றச் சாட்டுகளைக் கூறுவதும், அமைச்சர்கள் மீதே குறிப்பிட்டு புகார்களைச் சொல்வதும், அதற்கு பதிலளிக்க மற்ற தோழமைக் கட்சியினரும், கழகத்திலே உள்ள அமைச்சர்களும் என்னிடம் அனுமதி கேட்பதும், நான் அதற்கு அணை போட்டு வைப்பதும், ஒரு சில சந்தர்ப்பங்களில் எனக்குத் தெரியாமலே ஒருசிலர் விளக்கங்களை அளிப்பது என்பதும் ஒரு நல்ல நீடித்து நிலைத்து இருக்க வேண்டிய தோழமைக்கு உகந்த செயலாக இருக்க முடியாது.

இனியாவது பேசாதீர்கள்

ராமதாசுக்கு இந்த அரசின் செயல் முறைகளில் ஏதாவது குறை இருக்கு மேயானால் என்னிடம் நேரிலோ தொலை பேசியிலோ அவற்றை விளக்கிடலாம். அதை விடுத்து நேரிடையாக பத்திரிகைகளுக்குச் சென்று அறிக்கை விடுவதும், அதற்குப் பதில் அளிப்பதும் இரண்டுமே விரும்பத்தக்கதல்ல. ஏனென்றால், இரண்டு கட்சிகளைச் சேர்ந்த கீழ் மட்டத் தோழர்களிடம் இத்தகைய அறிக்கைகளால் அதிருப்தியும் வெறுப்பும் சில நேரங்களில் பகையுணர்ச்சியும் தோன்றி விடுமேயானால் பின்னர் இரு தரப் பினரிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவது என்பது சிரமமான செயலாக ஆகிவிடும். இனியாவது இதைத் தவிர்ப்பது நல்லது.

இவ்வாறு கருணாநிதி அறிக்கையில் கூறியிருக்கிறார்.

0 comments: