செக்ஸ் கவிஞர்கள் மு.மேத்தா கொதிப்பு

"செக்ஸ் விஷயத்தை மையப்படுத்தியே தற்போதைய சினிமா கவிஞர்கள் பலர் கவிதை எழுதுகின்றனர். பல கவிஞர்கள் எப்படி பாடல் எழுதக்கூடாது என்பதற்கு உதாரணமாக விளங்குகின்றனர்" என்று கவிஞர் மு.மேத்தா கூறினார்.

சி.கே.கே. அறக்கட்டளை சார்பில் ஈரோட்டில் இலக்கிய விழா நடந்தது. இதில் "துளிகள்" என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது. கவியரங்கத்துக்கு தலைமை வகித்த கவிஞர் மு.மேத்தா பேசியதாவது:

சமீபகாலமாக செக்ஸ் விஷயத்தை மையப்படுத்தியே பல கவிஞர்கள் திரைப்படங்களில் பாடல்களை எழுதுகின்றனர். என்னைப் போன்ற ஒரு சில கவிஞர்கள் "ராஜராஜ சோழன் நான்; என்னை ஆளும் காதல் தேவி நீதான்" என்று சினிமாவில் செக்ஸ் விஷயத்தை மறைமுகமாக எழுதினோம்.

ஆனால் இன்றைக்கு செக்ஸ் பாடல் எழுதுவதில் கவிஞர்களிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. ஒரு கவிஞர் பத்து அடி பாய்ந்தால், மற்றொரு கவிஞர் 15 அடி பாயும் அளவுக்கு செக்ஸ் விஷயத்தை மையப்படுத்தி பாடல்களை எழுதுகின்றனர். முன்பிருந்த திரைப்பட கவிஞர்கள் எப்படி பாடல்களை எழுத வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தனர். ஆனால், தற்போதுள்ள பல கவிஞர்கள் எப்படி பாடல்களை எழுதக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளனர்.

இவ்வாறு மு.மேத்தா பேசினார்.

0 comments: