ரஜினி ரசித்த பெரியார்! - கலைஞர் கவிதை

"என் வழி தனி வழி எனும்
பொன்மொழிக்குச் சொந்தக்காரர்-
பழகிவிட்ட நண்பருக்கு என்றும்
பந்த பாசம் மாறாத உறவுக்காரர்-
பல்வேறு கருத்துகள் அரசியலில்
படைதிரண்டு அலைகளாக மோதிய போதும்;
பதற்ற மடையாமல் பகுத்தறிந்து மவுனமாகப்
பண்பாடு போற்றுவதே பட உலகில் தான் கற்ற
பாடம் எனப் பகர்ந்தது மட்டுமன்றி;
பயமின்றி அதனைச் செயலிலும் காட்டியவர்-
பால வயதில் தனக்கு வழி காட்டி வாழ்வித்த
ஆலம் விழுதுகளை அரவணைத்துப் புகழ்ந்தேத்தியவர்-
பல்லாண்டு காலம் எனக்கும் நண்பர் -
சொல்லால் விளக்கமுடியாத நல்லிதயம் படைத்த தோழர்
வாய்மையொன்றே வாழ்வினில் அனைவர்க்கும் தேவைப்படும்
தூய்மை என்பதை கடைப்பிடிக்கும் மனிதநேயர்!
ரஜினி! ரஜினி! ரஜினி! ரசிகர்களுக்கு மந்திரச்சொல்! அதுவே
ரசிகர் அல்லாதோர் பலருக்கும் மயக்கும் சொல்!
அவரையே எங்கள் தந்தை பெரியார்
அடடா, எப்படி மயக்கி விட்டார் பாருங்கள்!
"படம் பார்த்தேன்; பெரியார் படம் -
படமெடுத்தாடினர் அவருக்கு எதிராகப் பல பேர்-
அவர் படமா பார்ப்பதென்ற அய்யப்பாட்டுடன்
அன்பு நண்பர் சத்யராஜூடன் அப்படத்தைப் பார்த்தேன்
அடடா; என்ன சொல்வேன்? அய்யா பெரியாராக;
அச்சில் வார்த்ததுபோல் சத்யராஜ் நடித்தது கண்டேன்;
பெரியார் பற்றிப் பலர் பேசக் கேட்டுள்ளேன் - அவர்
பகுத்தறிவு முழக்கத்தை - அதனால் வென்ற இயக்கத்தை;
வைக்கம் போன்ற வரலாற்றுச் செய்திகளை;
சாதிக் கொடுமை ஒழிக்க அவர் சண்டமாருதமாய் எழுந்ததை-
நிகழ்ச்சிகளின் தொகுப்பாய்க் கண்டேன் - என்
நெஞ்சம் விம்மிட நிறைவாய்ச் சொல்கிறேன் -
கலைஞரும் வீரமணியாரும் பெரியாருடன் பழகியது;
விலை மதிப்பில்லா காலமன்றோ?
அக்காலம் நான் வாழ்வதில் எனக்கு
அளவிலா ஆனந்தம் பெருகுதன்றோ!
கலைச் சிகர உச்சியாகக் காட்சி தரும் சூப்பர் ஸ்டார்;
எம்மோடு வாழ்வதற்கு மகிழ்கின்றார் என்றால்; அவர்
நம்மோடு பெரியாரைப் புரிந்துகொண்டு வாழும் நாள்;
நம் போன்ற பகுத்தறிவாளர்க்கெல்லாம் திருநாள் தானே!

7 comments:

July 21, 2007 at 6:47 AM சிவபாலன் said...

கலைஞர் ஏன் இப்படி புலம்பி இருக்கிறார்? என்னமோ..

July 21, 2007 at 6:51 AM முரளிகண்ணன் said...

நெஞ்சு பொறுக்குதில்லையே

July 21, 2007 at 10:12 AM ஜீவி said...

பல்வேறு தளங்களில் உள்ளப் பலரை
அந்தந்த நேரங்களில் பாராட்டி மகிழ்வதால், பலன் பல உண்டு
என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தவர் கலைஞர். அந்த பலன்
அவர் சார்ந்த இயக்கத்துக்குப் போய்ச்
சேரும் என்பதும் அவர் அறிந்ததே.

July 21, 2007 at 9:09 PM கூல் said...

என் வழி தனி வழி ங்குறது பொன் மொழியாம்
என்ன கொடுமை ஸார் இது
நல்ல காலம் 1331 வது குறள் ன்னு சொல்லாமை விட்டாங்களே

ஆமா யார் இந்தக் கலைஞரு?
எதிலே கலைஞர் , சிவாஜி கட் அவுட்டுக்குப் பால் அபிஷேகம் பண்ணுறதிலேயா

July 22, 2007 at 10:02 AM வாசகன் said...

ஏம்ப்பா கலைஞ்சரு, ஒனக்கே இது ஓவராத் தெரியலயா? :-))))))

July 22, 2007 at 2:36 PM யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பாவம் கலைஞர்.
சிவாஜி ஆரவாரத்தில் ரஜனி அரசியலுக்கு வந்து ,ஸ்டாலினுக்கு சிக்கல் தந்திருவாரோ எனும் பிரமையில் பிசத்தியுள்ளார்.
வரவர கலைஞர் பிசத்தல் தாங்க முடியலடா சாமி.....

July 23, 2007 at 3:58 AM Unknown said...

சும்மா போட்டு வைப்போம். பின்னாளில் தேவைப்பட்டால் உபயோகப்படுத்தலாமே அதுக்குத்தான். தலைவர் வழி தனிவழி. ஹாஹாஹா - ரஜினி ஸ்டைல்