வந்தனாவுடன் வாழ தயார் ?- ஸ்ரீகாந்த்

"வந்தனாவுடன் சேர்ந்து வாழ்வது பற்றி யோசிக்கிறேன்" என்று போலீசில் நடிகர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.





நடிகர் ஸ்ரீகாந்துக்கும் வந்தனாவுக்கும் கடந்த மாதம் திருமணம் நடப்பதாக இருந்தது. அதற்குள், வந்தனா குடும்பத்தினர் மீது மோசடி வழக்குகள் இருப்பதாக செய்திகள் வெளியாயின. இதையடுத்து, திருமணத்தை ஸ்ரீகாந்த் குடும்பத்தினர் நிறுத்தினர். அதிர்ச்சி அடைந்த வந்தனா, கடந்த மாதம் அதிரடியாக ஸ்ரீகாந்த் வீட்டுக்குள் நுழைந்தார். "எனக்கும் ஸ்ரீகாந்துக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது" என்று கூறி, அதற்கான புகைப்படம் மற்றும் திருமண பதிவு சான்றிதழ்களை வெளியிட்டார்.

ஆனால், ‘அத்துமீறி வந்தனா வீட்டுக்குள் நுழைந்துள்ளார். அவரை வெளியேற்ற வேண்டும்' என்று ஸ்ரீகாந்த் தரப்பும், ‘ஸ்ரீகாந்துடன் சேர்த்து வைக்க வேண்டும்’ என்று கோரி வந்தனாவும் வடபழனி போலீசில் புகார் செய்தனர்.

முன்ஜாமீன் பெற்ற வந்தனா, வடபழனி போலீஸ் நிலையத்தில் தினமும் மாலை 4.30 மணிக்கு கையெழுத்து போட்டு வருகிறார். அதேபோல், ஸ்ரீகாந்த், அவரது அப்பா கிருஷ்ணமாச்சாரி, அம்மா ஜெயந்தி ஆகியோர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றனர்.

ஸ்ரீகாந்த் தன் பெற்றோருடன் வடபழனி போலீஸ் நிலையத்தில் தினமும் காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்று மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து, ஸ்ரீகாந்த் தன் பெற்றோருடன் நேற்று காலை வடபழனி போலீஸ் நிலையம் வந்தார். அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வயோலாபாய் முன்பு ஆஜராகி கையெழுத்து போட்டார். அப்போது, இன்ஸ்பெக்டர் வயோலாபாய், "திருமணம் செய்து கொண்ட பிறகு வந்தனாவுடன் சேர்ந்து வாழ்வதில் உங்களுக்கு என்ன பிரச்னை? வந்தனாவின் அண்ணன் மீதுதானே புகார்கள் இருக்கின்றன. அதற்கு வந்தனா என்ன செய்வார்?" என்று ஸ்ரீகாந்திடம் கேட்டார்.

அதற்கு நடிகர் ஸ்ரீகாந்த், 'வந்தனாவுடன் சேர்ந்து வாழ்வது பற்றி யோசிக்கிறேன்' என்றார். போலீஸ் நிலையத்தை விட்டு வெளியில் வந்த ஸ்ரீகாந்த், நிருபர்களிடம் கூறியதாவது:
என் பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைத்து விட்டேன். என் வீட்டுக்கு போவதில் எனக்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால், இப்போதைக்கு வீட்டுக்கு போக விரும்பவில்லை. அங்கு இருக்கும் என் 85 வயது பாட்டி நன்றாக இருக்கிறார்.
இந்த வழக்கைப் பற்றிய எல்லா விவரங்களும் தினமும் பத்திரிகையில் வந்து கொண்டிருக் கிறது. புதிதாக வேறு எதுவும் செய்தி இல்லை.

சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் நிருபர்களிடம் கோபப்பட்ட ஸ்ரீகாந்த், நேற்று வடபழனி போலீஸ் நிலையத்தில் நிருபர்களிடம் சகஜமாகப் பேசினார். ‘அம்மாவின் முகத்தில் மைக் பட்டதால்தான் நேற்று கொஞ்சம் கடுமையாக பேச வேண்டியதாகிவிட்டது‘ என்று ஸ்ரீகாந்த் கூறினார்.

வடபழனி போலீஸ் நிலையத்துக்கு நடிகர் ஸ்ரீகாந்த் வருவதை அறிந்து அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் போலீஸ் நிலைய வாசலில் கூடினர். ஸ்ரீகாந்த் போலீஸ் நிலையத்தை விட்டு வெளியே செல்லும்வரை அங்கேயே இருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

0 comments: