புதுவையில் கம்யூ,பா.ம.க.விற்கு நியமன எம்.எல்.ஏ

காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சி களான பா.ம.க., கம்யூனிஸ்ட் கட்சிக்கு தேர்தலில் இடஒதுக்கீட்டின் போது அளித்த வாக்குறுதியின் படி தலா ஒரு நியமன சட்ட மன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்று மாநில முதலமைச்சர் என்.ரங்கசாமி கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனசக்தி நாளிதழின் புதுவை பதிப்பு வெளியீட்டு விழா வேல் சொக்கநாதன் திருமண நிலையத்தில் நடைபெற்றது.

கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக செயலாளர் தா.பாண்டியன் முதல் இதழை வெளியிட மாநில முதலமைச்சர் என்.ரங்கசாமி அதனை பெற்றுக் கொண்டு விழாவில் அவர் பேசிய தாவது:

இந்த விழாவில் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார். காங்கிரஸ் அரசு மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதி சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறது.

நான் முதலில் வேளாண் அமைச்சராக இருந்த போது தலைவர் சுப்பையா ஒருமுறை தொலைபேசியில் பேசி என்னை வீட்டிற்கு அழைத்தார். அவரை சந்தித்த போது அமைச்சராக நன்றாக செயல்படுகிறாய், இன்னும் நன்கு செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார். அவரது வார்த்தைகள் என்னை மிகவும் நெகிழ வைத்தது.

கம்யூனிஸ்ட் தலைவர் வ.சுப்பையா தபால் தலை வெளியிட வேண்டும் என்று சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தோம். நமது மாநில பாராளுமன்ற உறுப்பினர்கள் முயற்சி எடுத்து விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்தல் காலத்தில் தொகுதி பகிர்வு பேச்சு வார்த்தையின் போது கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பாமக ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்று அளிக்கப்பட்ட வாக்குறுதி விரைவில் நிறைவேற்றப்படும். புதுவை மாநில கவர்னர் வெளியூர் சென்றிருக்கிறார். அவர் திரும்பியதும் நிறைவேற்றப் படும்.

புதுவையில் முக்கிய சாலையில் இலக்கிய பேராசான் ஜீவா சிலை நிறுவப்படும். அதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

இவ்வாறு முதலமைச்சர் என்.ரங்கசாமி பேசினார்.

விழாவிற்கு புதுவை மாநில செயலாளர் நாரா கலைநாதன் தலைமை தாங்கினார். பேராசிரியர் அபிஷேகம் முன்னிலை வகித்தார். துணைச் செயலாளர் ராமமூர்த்தி வரவேற்றார்.பாராளுமன்ற உறுப்பினர்கள் நாராயணசாமி, ராமதாஸ், அப்பாதுரை, சட்ட மன்ற உறுப்பினர் விஸ்வநாதன், மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் காந்திராஜ் ஆகியோர் பேசினர்.

0 comments: