தலையங்கம் -"கல்கி"

நடந்து முடிந்த தேர்தலும் நடக்கப்போகும் தேர்தலும்


இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெறுவதென்பது கடினம். இதுவரை நடந்த ஆட்சி மீது அதிருப்தி கொண்டு எதிர் அணிக்கே மக்கள் வாக்களிப்பது இயல்பு. மதுரை மேற்கில் இந்த நிலை மாறுபட்டு, அ.தி.மு.க.வுக்கு, போன தேர்தலை விடவும் குறைவாக வாக்குகள் பதிவாகியுள்ளன. விஜயகாந்த் கட்சி, வாக்குகளில் தன் பங்கைக் கணிசமாக உயர்த்திக் கொண்டிருக்கிறது. இந்த இரண்டு எதிர்கட்சிகளின் ஒட்டுமொத்த வாக்குகளை விடவும் மிக அதிகமாகப் பெற்று, தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. விடமிருந்து இந்தத் தொகுதியை காங்கிரஸ் பறித்துக் கொண்டும்
விட்டது.

இந்நிலையில், எதிர்கட்சித் தலைவர் ஜெயலலிதா, தி.மு.க. கூட்டணியின் வெற்றியை கௌரவமாக ஆமோதிக்காததுகூட ஆச்சர்யமில்லை; அதை அவரிடம் எதிர்பார்க்க முடியாது என்று கடந்த கால அனுபவங்கள் உணர்த்துகின்றன.

ஆனால், வெற்றி பெற்ற தி.மு.க. அணித் தலைவர், அமைதியாகவும் நேர்மையாகவும் தேர்தலை நடத்த அரும்பாடுபட்ட தேர்தல் கமிஷனுக்கு உரிய ஆமோதிப்பை வழங்குவதற்குப் பதிலாக, அதனைக் குறை கூறி அதன் நேர்மையையே கேள்விக்குட்படுத்தியிருப்பதுதான் அதிசயமான வேதனை! கமிஷன் ஒரு தலைபட்சமாக நடந்து கொண்டிருந்தால், இவ்வளவு பெரிய வெற்றி தி.மு.க. அணியினருக்கு எவ்வாறு கிட்டியிருக்கும்?

முதல்வரின் பாய்ச்சல், வெற்றிப்படிகளின் உச்சியில் இடறி விழுந்தது போலாகிவிட்டது.

தன்னதிகாரம் பெற்ற ஜனநாயக அமைப்புகளின் மேலாண்மையை
மதித்து ஏற்கும் பக்குவம் நம் அரசியல்வாதிகளுக்கு என்றுதான் வரப்போகிறதோ!

குடியரசுத் தலைவர் பதவிக்கு முற்றிலும் தகுதிபடைத்த அறிஞர்களையும் நன்மக்களையும் ஒதுக்கிவிட்டு, சர்ச்சைகளின் உறைவிடமான ஒரு வேட்பாளரை, ஆளும் கூட்டணி நியமித்திருப்பது மிகவும் கொடுமை!

பிரதிபா பாடீல் மீதும் அவரது சுற்றத்தார் மீதும் புற்றீசலாகக் குற்றச்சாட்டுகள் கிளம்பிய வண்ணம் இருக்கின்றன. இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்துமே பொய் என்று அவர் சார்பில் காங்கிரஸ் தலைவர்கள் மறுப்பு வெளியிடும்போதே, மீடியா அக் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களைப் பிட்டுப் பிட்டு வைத்துக் கொண்டிருக்கிறது! இதற்கிடையே விருந்து, பேரணி, கொண்டாட்டம் என்று இந்த வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் முயற்சிகள் அருவருப்பூட்டி, கௌரவமும் நடுநிலையும் மிக்க நாட்டின் முதல் குடிமகன் பதவிக்கே இழுக்கு செய்கின்றன!

‘மனசாட்சிப்படி வோட்டுப் போடுங்கள்’ என்று பா.ஜ.க. அணி வேட்பாளர் ஷெகாவத் கேட்டுக் கொண்டிருக்கிறார். அது எப்படி சாத்தியம் என்பதுதான் கேள்விக்குறி!

ஒரு வேட்பாளர், குற்றச்சாட்டு மழையில் தத்தளிக்க, எதிர் வேட்பாளர் ஹிந்துத்வா கோட்பாடுகளின் ஆதரவாளர்! அவரிடம் நடுநிலைமையையோ கட்சி மற்றும் மதம் கடந்த தெளிந்த பார்வையையோ எவ்வாறு எதிர்பார்ப்பது? மனசாட்சிப்படி
வாக்களிப்பதானால் இருவரையுமே நிராகரிக்கத்தான் முடியும்.

குடியரசுத் தலைவரைத் தங்கள் கைப்பாவையாக்கிக் கொண்டு, தட்டிக் கேட்பார் இல்லாமல் தங்கள் கொட்டத்தைத் தொடர்வதற்கான திட்டத்தை அரசியல்வாதிகள் தீட்டியிருப்பது தெளிவு. அதனை முறியடிக்க முடியாவிட்டாலும் அது குறித்த விழிப்புணர்வு பெற்று
எச்சரிக்கையாக இருப்பது மக்களின் பொறுப்பு!

1 comments:

July 10, 2007 at 6:25 AM MSATHIA said...

Firefox உலவியில் எழுத்துக்கள் பிய்ந்து தெரிகிறதே.
யாரும் இதுவரை சொல்லலாவிட்டால், இங்கே இருக்கிறது சரிசெய்ய செயல்முறை