தலலயங்கம் - 'விடுதலை'

அடிப்படை வாதத்தின் ஆபத்தான முகம்!




எந்த மதமாக இருந்தாலும் அடிப்படை வாதத்தினைக் கையில் எடுத்துக் கொள்வோர் இருக்கத்தான் செய்கிறார்கள். மதம் என்பதே அபின் என்றாலும், ஒடுக்குமுறைக்கான கூர் ஆயுதம் என்றாலும், அடிப்படை வாதமானது அந்தக் கூர்முனையில் தடவப்பட்ட நஞ்சாகும்.
பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் நிகழ்வுகள், இஸ்லாமிய மக்களையே கூட அதிர்ச்சி அடையச் செய்திருக்கும்.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் லால் மசூதியின் கட்டுப்பாட்டில் இரு மதரசாக்களில் ஏழாயிரம் பேர் படித்து வருவதாகவும், அங்கு இருபால் மாணவ, மாணவிகளுக்கும் அடிப்படைவாதக் கல்வி போதிக்கப்படுவதாகவும், இஸ்லாமியக் கொள்கைகளுக்கு விரோதமாக நடப்பவர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும், அரசுக்கே இந்த அமைப்புகள் சவாலாக இருப்பதாகவும் தகவல்கள் கசிந்த நிலையில், இந்த இரு மதரசாக்களும் இராணுவத்தால் முற்றுகையிடப்பட்டுள்ளன.

அப்துல் அஜீஸ் அவரது உடன் பிறப்பான அப்துல் ரஷித் காஜி ஆகிய இருவருமே இந்த அமைப்பினை நடத்தி வருகிறார்கள்.அப்துல் அஜீஸ் பெண்ணைப்போல பர்தா அணிந்து தப்பிக்கச் சென்றபோது பிடிபட்டுள்ளார். அவர் பல தகவல்களைக் கூறியதாகத் தெரிகிறது.
அடுத்த 30 நாள்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களும், தேவையான ஆயுதங்களும், வெடிகுண்டுகளும் மசூதிக்குள் இருப்பதாக மதக் குரு கூறுவதிலிருந்து திட்டமிட்ட வகையில் மதரசாவை உருவாக்கி நடத்தி வருவது புலனாகிறது.

பாகிஸ்தான் அதிபர் முஷாரப்மீது ராக்கெட் குண்டு வீசும் அளவுக்கு அவர்கள் தயாராகி உள்ளனர் என்பது சாதாரணமானதல்ல.இப்பொழுது மசூதி இராணுவத்தால் சுற்றி வளைக்கப் பட்டுள்ளது. உள்ளே மாணவர்கள், மாணவிகள் ஆயிரக் கணக்கில் இருப்பதால் இராணுவம், தான் நினைத்தபடி சூறையாடிடவும் முடியாது. மிகவும் விழிப்பாகப் பிரச்சினையைக் கையாள வேண்டிய நெருக்கடி! அரசுத் தரப்பில் எது நடந்தாலும் அது உலகம் தழுவிய மதப் பிரச்சினையாக வெடித்துக் கிளம்பும் ஆபத்தும் இதற்குள் இருக்கிறது. காரணம் அடிப்படைவாதிகள் உலகம் முழுவதும் பரவிக் கிடக்கிறார்கள்.

இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் மத அடிப்படை வாதம் எவ்வளவுப் பெரிய ஆபத்தானது என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.இந்தியாவில் இந்துத்துவா என்ற முகமூடி அணிந்து கொண்டு அடிப்படைவாத உருவமாகவே இருக்கக் கூடிய ஒரு கூட்டம் இருக்கிறது. அந்தக் கூட்டத்தின் ஆபத்தான வெளிப்பாடே குஜராத் கலவரங்கள். அந்தக் கூட்டத்தின் இன்னொரு முகமே ராமன் பாலம் என்பது போன்ற குரூரமான கூச்சல், மற்றொரு முகமே பாபர் மசூதி இடிப்பு! இவர்கள் இந்து மதத் தாலிபன்கள்! அவர்களோ முசுலிம் மதக் காவிகள்!

மதம் மக்களுக்குத் தேவையென்றும், அதுதான் நன்மார்க்கத்துக்கான வழிகாட்டியென்றும், ஒழுக்க நெறிக்கு ஊன்றுகோல் என்றும் பொதுவாக இதோபதேசம் செய்பவர்கள் அந்தக் கருத்துகளின்மீது மறுபரிசீலனை செய்யவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவிட்டனர்.
மதக் காரணங்களுக்காக உலகில் மனித ரத்தம் சிந்தப்பட்ட அளவுக்கு, வேறு காரணங்களுக்காகச் சிந்தப்பட வில்லை என்பதுதான் வரலாறு.

அவரவர்களின் வேத நூல்களில் பேசப்படும் மென்மையான `குரலுக்கும்’, யதார்த்தமான நடப்புகளுக்கும் உள்ள வேறுபாட்டை நாடு அனுபவத்தில் கண்டுகொண்டுதானிருக்கிறது.
மதத்தை அறவே தூக்கி எறிய முடியாவிட்டால், அந்தந்த மதத்துக்குள் இருக்கும் கல்வியாளர்களும், சமூகக் கவலை யாளர்களும் ஒரு மேசைமுன் அமர்ந்து நிதானமாகக் கருத்துகளைப் பரிமாறக் கடமைப்பட்டுள்ளனர். காலத்துக்கேற்ற வடிவங்களைக் கொடுக்க முன்வர வேண்டும். அடிப்படை வாதம் என்கிற எரிமலை வீச்சிலி ருந்து மக்களைக் காப்பாற்றுவது எப்படி என்று பொறுப்பாகச் சிந்திக்காவிட்டால், செயல்வடிவம் கொடுக்காவிட்டால், ஒரு முடிவை ஏற்படுத்தாவிட்டால், ஒட்டுமொத்தமாகவே அந்த எரிமலை எரித்து முடித்துவிடும், எச்சரிக்கை!

0 comments: