இணையதளம் மூலமாக இனி வழக்கு தாக்கல் செய்யலாம்

இணைய தளம் மூலமாக வழக்குகளைத் தாக்கல் செய்யும் முறை வரும் செப்டம்பர் அல்லது அக்டோபரில் தொடங்கும் என்று தலைமை நீதிபதி ஏ.பி. ஷா கூறினார்.

இ-கோர்ட் திட்டத்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தொடங்கி வைத்து அவர் பேசினார். இந்த விழாவில் 10 நீதிபதிகளுக்கு லேப்டாப் கம்ப்யூட்டர்களை வழங்கிய அவர் கூறியதாவது:

இ-கோர்ட் திட்டமானது, இணையதளம் மூலமாக வழக்குகளைப் பதிவு செய்யவும், நீதி நிர்வாகத்தை வெளிப்படையாக நடத்தவும் உதவும். நாடு முழுவதும் 13,000 நீதிமன்றங்களை கம்ப்யூட்டர் மூலம் இணைக்க இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக 15,000 நீதிபதிகளுக்கு லேப் டாப் கம்ப்யூட்டர்கள் வழங்கப்படும். தமிழ்நாட்டில் 700 நீதிபதிகளுக்கு லேப் டாப் கம்ப்யூட்டர்கள் தரப்படும்.

5 ஆண்டுகளில் 3 கட்டங்களாக தமிழ்நாட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

நீதிபதிகளுக்குத் தேவையான லேப்டாப் கம்ப்யூட்டர்கள் 2 ஆண்டுகளில் வழங்கப்படும். இத்திட்டத்துக்காக முதல் கட்டமாக ரூ.441 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
வழக்குத் தாக்கல் செய்பவர், தனது வழக்கின் அனைத்து விவரங்களையும் இணையதளம் மூலமாக அறிந்து கொள்ள முடியும்.

தமிழ்நாடு முழுவதும் மாவட்ட நீதிமன்றங்களில் வீடியோ கான்பரன்சிங் முறை அறிமுகப்படுத்தப்படும். மகாராஷ்டிர மாநிலத்தில் எல்லா நீதிமன்றங்களும் கம்ப்யூட்டர் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு இவ்விஷயத்தில் பின்தங்கியுள்ளது. கம்ப்யூட்டர் மயமாக்கும் திட்டத்தை விரைவில் முடிக்க அரசு உடனே உதவ வேண்டும் என்றார் தலைமை நீதிபதி.

0 comments: