சேதுக் கால்வாய்த் திட்டம் நீண்ட நாளைய முயற்சி. செயல் திட்டம் கூடிவரும் வேளையில் மதவெறிக்கூட்டமும், சுயநலக் கூட்டமும் எதையெதையோ சொல்லி, எப்படியெப்படியோ எதிர்த்து, இறுதியில் அவர் களின் கடைசிப் புகலிடமாக உச்சநீதிமன்றத்தில் நின்று உருக்குலைக்கப்பார்க்கிறார்கள்.
இதற்கு, இராமர் பாலம் என்ற இல்லாத கற்பனை அவர்களின் கையாயுதம்; இராமாயணம் அவர்களின் கவசம்; நம்பிக்கை என்று வாதிடுவது அவர்களின் வலிமை.
நம்பிக்கை என்பது ஒருவரின் தனிப்பட்டக் கருத்து; அது உண்மையை உறுதி செய்ய உதவாது. அவன்தான் கொலை செய்தான் என்று ஒருவருக்கு நம்பிக்கையிருக்கலாம். அவரது நம்பிக்கையின் அடிப்படையில் நீதிமன்றம் தண்டனை வழங்க முடியுமா? என்று கேட்டால்,பெருவாரியான மக்கள் நம்புகிறார்கள் - என்ற வாடிக்கையான வாதத்தை வைப்பார் கள்.
நாவரசு என்ற, அண்ணாமலைப் பல்கலைக் கழக மருத்துவ மாணவரை, ஜான் டேவிட் என்பவன்தான் கொலை செய்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. அதை அனைவரும் நம்பினர். ஆனால், ஆதாரம் இல்லையென்று நீதி மன்றம் ஜான் டேவிட்டை விடுதலை செய்துவிட்டதே!
அப்படியென்றால் நீதிமன்றத்திற்குத் தேவை ஆதாரமேயன்றி, நம்பிக்கையல்ல.
ஆனால் அவாள் வழக்கு என்று வந்துவிட்டால், ஆதாரம் எதுவும் தேவையில்லை சட்டம், நடைமுறை, விதிமுறை எதுவும் வேண்டாம்! மனுதர்ம காலந்தொட்டு, மக்களாட்சிக் காலம் வரை இதுதான் நிலை!
செத்துப்போன பெரிய சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரசுவதி (பெரியவாள்) கோமா நிலையில் இருந்தபோது நடந்த கனகாபிஷேகத்திற்கு வெளி நாட்டிலிருந்து தங்கம் வந்த போது அப்பெட்டியை எச் சோதனையும் செய்யாமல் அப்படியே அனுப்ப வேண்டுமென்று சுங்கத் துறைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இன்றளவும் அத்தங்கத்திற்கு கணக்கில்லை. உச்ச நீதிமன்றத்திற்கு இது தெரிந்தாலும் அது கண்டு கொள்ளாது. காரணம் இது அவாள் சமாச்சாரம்!
ஆனால், குப்பனும் சுப்பனும் அரை பவுன் எடுத்து வந்தால், சுங்கத் துறை சுற்றி வளைத்து அவனைப் பங்கம் செய்து பத்திப் பத்தியாய் செய்தி வெளியிட்டு விடும்.
மசூதி இருக்கும் இடத்தில் தான் இராமர் பிறந்த இடம் இருக்கிறது என்பர். ஆதாரம் என்னவென்று கேட்டால், அது இந்துக்களின் நம்பிக்கை என்பர்.மதுராவில் உள்ள மசூதியை இடிக்க வேண்டும் என்பர். ஏன் என்று கேட்டால், கண்ணன் பிறந்த சரியான இடம் மசூதிக் குள்தான் உள்ளது என்று காரணம் கூறுவார்கள். ஆதாரம் இருக்கிறதா? என்று கேட்டால், ஆதாரம் எல்லாம் எதுவும் இல்லை, எங்கள் நம்பிக்கை என்பர்.
பாமர மனிதன்கூடப் பட்டென்று சொல்வான். இது பச்சை அயோக்கியத்தனம் என்று. ஆனால், நீதிமன்றங்களுக்கு மட்டும் அது நியாயமாகவே படுகிறது!
சிவபெருமான் தலையில் நிலவு இருக்கிறது என்பது எங்கள் நம்பிக்கை. சிவன் இந்திய நாட்டுக் கடவுள், எனவே, நிலவு எங்களுக்குத் தான் சொந்தம் என்று கூறினால், அமெரிக்கா, இரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஒத்துக் கொள்ளுமா?
இந்திய நாட்டுக் கடவுள் திருமால், பூமியை ஒரு காலால் அளந்து தனக்கு உரிமையாக்கிக் கொண்டார். ஆகாயத்தை இன்னொரு காலால் அளந்து உரிமையாக்கிக் கொண்டார். எனவே, ஆகாயம், பூமி இரண்டுமே இந்தியர்களுக்கு மட்டுமே சொந்தம், அதுவும் வைணவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்று உரிமை கொண்டாடினால், உலக நாடுகள் ஒத்துக் கொள்ளுமா?
குறிப்பாக சிவனை வணங்குகிறவர்கள் ஒத்துக் கொள்வார்களா
பூமாதேவி என்பது கோடானுகோடி மக்களின் நம்பிக்கை. எனவே, அதில் துளைபோட்டு குழாயை விடக் கூடாது என்று கூறமுடியுமா? அந்த நம்பிக்கையைத் தகர்த்துத்தானே பூமாதேவியைக் குடைகிறார்கள்!
பூமாதேவி கோடிக்கணக்கானோரின் நம்பிக்கை. அது பூமி தெய்வம். எனவே, அதில் ஓட்டை போடக்கூடாது என்று ஒருவர் வழக்குப் போட்டால், உச்ச நீதிமன்றம் தடை கொடுக்குமா?
இவையெல்லாம் பைத்தியக்காரத்தனம் என்றால், இராமர் பாலம் என்பது வெறும் நம்பிக் கையின் அடிப்படையிலானது, அதுவும், புதிதாய்ப்புனையப் பட்ட நம்பிக்கையிலானது என்னும் போது, அதற்கு மட்டும் என்ன தடையாணை? எந்த அடிப்படையில் தடையாணை வழங்கப்படுகிறது?
அப்படியே நம்பிக்கையென்று கொண்டாலும், இராமர் பாலம் என்பதும் இலங்கையென்பதும் வடஇந்தியாவிலுள்ளதா? தென்னிந்தியாவிலுள்ளதா? அதையே விளங்கிக் கொள்ளாமல் ஆர்ப்பாட்டம், அடாவடித்தனம் அன்றாடம் அரங்கேற்றுவது அசல் மோசடித்தனமல்லவா?
இந்த இலங்கையா?
1. வடபுலத்தில் உள்ளது போலவே தென்புலத்திலும் (தமிழகத்திலும்) நகரங்கள் உண்டு.
வடக்கே காசி - தெற் கேயுள்ளது தென்காசி
வடக்கேயுள்ளது மதுரை - தெற்கேயுள்ளது தென்மதுரை.
வடக்கேயுள்ளது தான் இலங்கை- தெற்கேயுள்ளது தென்னிலங்கை.
தற்போது ஸ்ரீலங்கா என்று அழைக்கப்படும் பகுதிக்கு, தென்னிலங்கை என்றுதான் பெயரேதவிர இலங்கை என்பது அல்ல.
தமிழகத்தில் உள்ள மதுரை தென்மதுரைதான். மதுரை என்பது கண்ணன் பிறந்த பகுதிதான்.
தெற்கத்திக் கள்ளனடா தென்மதுரைப் பாண்டியன்டா என்ற திரைப்படப் பாடல் கூட இவ்வழக்கத்தை; இவ்வுண்மையை உறுதி செய்யப் போதிய சான்றாகும்.
அதுபோல்தான், நமக்கு அருகிலுள்ள இலங்கை தென்னிலங்கை என்றே நீண்ட நெடுங்காலமாக அழைக்கப்பட்டு வருகிறது.
இது தென்னிலங்கை என்றால், வடக்கேயுள்ளது இலங்கை என்பது உறுதியாகிறது.
எனவே, இராமாயணத்தில் சொல்லப்படுவது வட இந்தியாவில் உள்ள இலங்கையே தவிர, இந்த இலங்கை இல்லை.
2. இலங்கைத் தீவு பின்னால் உருவானது.இராமாயணம் நடந்ததாகச் சொல்லப்படும் காலத்தில் இலங்கை தனித்தீவாக இல்லை. அது தமிழ்நாட்டைச் சேர்ந்த நிலப்பகுதியாகவே இருந்தது.
தாமிரபரணி ஆறு தென்னிலங்கை வரை ஓடியதற்கான அசைக்க முடியாத ஆதாரங்கள் உள்ளன. இந்த இலங்கையின் பழைய பெயர் தாமிரபரணி என்பதேயாகும். அசோகர் கல்வெட்டில் இந்த இலங்கையானது தாமிரபரணி என்றே குறிக்கப்பட்டுள்ளது. கிரேக்க மொழியில் அதை தாப்ரோபேன் என்று அழைத்தனர்.
ஆறு எங்குச் சென்று முடிகிறதோ அந்த இடத்தை வைத்து அந்த ஆற்றை அழைப்பது வழக்கில் உள்ளது. சிதம்பரம் வட்டத்தில், ஒரு வாய்க்கால் உடையூர் என்ற ஊரில் சென்று முடிவடைவதால் அதற்கு உடையூர் வாய்க்கால் என்றே பெயர் வழங்குகிறது.
அதைப்போல், மற்றொரு வாய்க்கால் அரியகோஷ்டி என்ற ஊரில் சென்று முடிவடைவதால் அதற்கு அரிய கோஷ்டி வாய்க்கால் என்று பெயர் வழங்குகிறது.
அவ்வாறுதான், தாமிர பரணி என்ற பகுதியில் சென்று முடிவடைந்ததால் அந்த ஆறு தாமிரபரணி ஆறு என்று அழைக்கப்பட்டது. இலங்கையின் பழைய பெயர், தாமிர பரணி என்பதுதான் - என்பதை தாமிரபரணி ஆற்றின் பெயரே அய்யமின்றி விளக்கிக் கொண்டு இருக்கிறது. இலங்கை அப்போது தனித்தீவாக இல்லையென்பதற்கும் இது அசைக்க முடியாத சான்றாகும்.
3. இராமாயணம் நடந்த தாகக் கூறப்படும் காலத்தில் இலங்கை, தமிழகத்தோடுதான் சேர்ந்திருந்தது என்கின்ற போது, குறுக்கே கடல் இருக்க வாய்ப்பில்லை. அதனால், அணைகட்ட (பாலங்கட்ட) வேண்டிய அவசியம் இல்லை. அணை கட்டியதாக இராமாயணம் கூறுவதால், இராமாயணத்தில் கூறப்படும் இலங்கை இதுவல்ல; வடக்கே அணை கட்ட வேண்டிய அவசியச் சூழலில் இருந்த, வட இந்தியாவில் உள்ளது இலங்கை தான் என்பது உறுதியாகிறது.
4. இராமன் பிறந்த இடம் வடநாட்டில் உள்ள அயோத்தி என்னும்போது, இராமன் பாலம் அமைத்ததாகக் கூறப் படும் இலங்கை, வட இந்தியாவில் உள்ள இலங்கைதான் என்பது உறுதியாகிறது.
-தொடரும்
தரவு -விடுதலை
கட்டுரையாளர் - மஞ்சை வசந்தன்
Showing posts with label செய்தி விமர்சனம். Show all posts
Showing posts with label செய்தி விமர்சனம். Show all posts
Wednesday, October 24, 2007
1
