இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் இன்னும் 5 நாட்களுக்குள் பூகம்பம் வர வாய்ப்புள்ளதாக தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழக பேராசிரியர் வேங்கடநாதன் தெரிவித்தார்.
இதுபற்றி தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழக இயற்பியல் துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை பேராசிரியர் டாக்டர்.என்.வேங்கடநாதன் கூறியதாவது:
புவி வானியல் அமைப்பு மற்றும் வெப்ப மாற்றம் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. அதன்படி, 33.06 டிகிரி வடக்கு அட்சரேகை, 74.05 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் வரும் ஆசியா கண்ட பகுதிகளில் 5 முதல் 7 ரிக்டர் அளவில் பயங்கர பூகம்பம் வர 60 சதவீத வாய்ப்பு உள்ளது.
இந்தியாவின் கார்நிகோபார் பகுதியில் 5.5 ரிக்டர் முதல் 6 ரிக்டர், இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் 5.5 முதல் 6 ரிக்டர், இந்தோனேசியாவின் ஜாவா தீவில் 7 ரிக்டர், ஜப்பானின் ஹோன்சு பகுதியில் 6.5 ரிக்டர், ஈரானில் 6.2 ரிக்டர் என்ற அளவில் பூகம்பம் வரலாம். வரும் 22-ம் தேதி முதல் 28-ம் தேதிக்குள் பூகம்பம் வருவதற்கு 60 சதவீத வாய்ப்பு உள்ளது.
காஷ்மீரில் 15-ம் தேதிக்கு பிறகு பூகம்பம் வரும் என்று ஒரு வாரம் முன்பே கூறினேன். அங்கு 12-ம் தேதி பூகம்ப அறிகுறி தென்பட்டது.
இவ்வாறு வேங்கடநாதன் கூறினார்.
தரவு -
தமிழ்முரசு