தினமனி தலையங்கம்

தொடரும் முயற்சி; கிட்டுமா வெற்றி - எஸ்.ராஜாராம்



"ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் ஆக ஆதரவு அளிக்க வேண்டும்''

அமெரிக்கா முதல் ஆப்கானிஸ்தான் வரை எந்த நாட்டுத் தலைவர்கள் இந்தியா வந்தாலும், இந்தியா சார்பில் வைக்கப்படும் முக்கியக் கோரிக்கைகளில் இதுவும் ஒன்று.

வெளிநாட்டுத் தலைவர்களில் பலர் இந்தியாவின் கோரிக்கைக்கு ஆதரவு தருவதாகவும், சிலர் பரிசீலிப்போம் என்றும் கூறிவிட்டுச் சென்றுள்ளனர்.ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளாக, அணுஆயுத நாடுகளான அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் உள்ளன. இந்த நாடுகளுக்கு "வீட்டோ' (ஸ்ங்ற்ர்) என்னும் ரத்து அதிகாரம் உண்டு.

உலக அரங்கில் இந்தியா அணுஆயுத நாடாகக் கருதப்பட்டாலும், ஐ.நா. மற்றும் அமெரிக்காவைப் பொருத்தவரை இன்னும் அணுஆயுத நாடாக இந்தியாவை அங்கீகரிக்கவில்லை. அதற்கு முக்கியக் காரணம் -அப்படி அங்கீகரித்தால் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியாவைச் சேர்க்கவேண்டிய நிலை ஏற்படும். மேலும், அணுஆயுத நாடுகளாகக் கருதப்படும் பாகிஸ்தான், வடகொரியா போன்றவையும் போட்டிக்கு வரும்.

பொருளாதாரத்தில் வளர்ந்துவரும் உலகின் நான்காவது சக்தி இந்தியா என அமெரிக்கா ஒப்புக்கொண்டாலும், ராணுவ வலிமையைப் பொருத்தவரையில் இந்தியாவின் பலத்தை ஒப்புக்கொள்ள மறுக்கிறது.அமெரிக்காவுக்கு பிடிக்காத ரஷியா, ஈரானுடனான இந்தியாவின் உறவும் இதற்கு ஒரு காரணம்.

மேலும், அமெரிக்க அதிபராக கிளிண்டன் இருந்தபோது, அணுஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு இந்தியாவை அமெரிக்கா மிகவும் வலியுறுத்தியது. ஆனால், இந்தியா அதற்கு திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இதையும் ஒரு காரணமாகச் சொல்லலாம்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக வேண்டுமென்றால், ஐ.நா. பொதுச்சபை மற்றும் பாதுகாப்பு சபையில் தீர்மானம் கொண்டுவர வேண்டும்.இதற்கு வீட்டோ அதிகாரம் படைத்த நாடுகள் மட்டுமன்றி, சிவில் பணிகளுக்காக அணுசக்தி மூலப்பொருளை (யுரேனியம்) சப்ளை செய்யும் நாடுகளான பிரேசில், ஆஸ்திரேலியா, ஜப்பான், ஸ்வீடன், கனடா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவும் மிக அவசியம்.

அப்படியானால், 5 வீட்டோ நாடுகளில் இந்தியாவுக்கு ஆதரவு தரும் நாடு எது என்றால் சந்தேகமின்றி ரஷியாதான்.இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியவை எப்போதும் அமெரிக்காவின் பின்னால்தான். அமெரிக்காவின் கருத்தையே அவை ஆதரிக்கும். சீனாவோ மதில்மேல் பூனை. அந்த நாடு ஆதரிப்பது சந்தேகம்தான். ஏனெனில் அனைத்துத் துறைகளிலும் தங்களுடன் இந்தியா போட்டிபோட்டு வருவதே சீனாவுக்கு நெருடலான விஷயம்.

ஐ.நா. பொதுச்செயலர் பதவிக்கான தேர்தலில்கூட, இந்தியா சார்பில் நிறுத்தப்பட்ட சசிதரூர் இரண்டாவது இடத்தையே பெறமுடிந்தது. அந்தத் தேர்தலில், வீட்டோ அதிகாரம் படைத்த இரண்டு நாடுகள் இந்தியாவுக்கு எதிராக வாக்களித்தன.ஐ.நா. பொதுச்செயலர் பதவிக்கு இந்தியாவை ஆதரிக்காத சீனா, பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக ஆதரிக்கும் என்பது எதிர்பார்க்க முடியாத ஒன்றுதான்.

பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற நினைக்கும் இந்தியா, இதுவரை சிறிய நாடுகளைச் சேர்ந்தவர்களே பொறுப்பு வகித்துவந்த ஐ.நா. பொதுச்செயலர் பதவிக்கு போட்டியிடலாமா என்று அப்போது சர்ச்சை எழுந்தது வேறு விஷயம்.

இவை எல்லாம் கடந்தகாலச் சூழ்நிலைகள். ஆனால், தற்போது இந்தியா - அமெரிக்கா உறவு மேம்பட்டிருப்பது சற்று ஆறுதலான விஷயம். இரு நாடுகளிடையேயான அணுசக்தி ஒப்பந்தம் இறுதிவடிவம் பெறும் கட்டத்தில் உள்ளது.

""இரு நாடுகளுக்கு இடையிலான உறவைத் தாங்கி நிற்கப்போகும் தூண் இந்த அணுசக்தி ஒப்பந்தம்'' என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலீஸô ரைஸ் கூறியிருக்கிறார்.

இந்த ஒப்பந்தத்திற்கு இந்தியாவில் அரசியல் கட்சிகளிடையே கடும் எதிர்ப்பு இருந்தாலும், இந்திய அரசு உறுதியாக இருக்கிறது.

உலகின் 3-வது சக்தியாக வளர்ந்துவிட்டது சீனா. இதை உணர்ந்துதான் ஆரம்பத்தில் அந்த நாட்டை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சேர்க்க வேண்டும் என அமெரிக்கா வலியப்போய் அழைத்தது. அதுபோல, இந்தியாவும் தவிர்க்க முடியாத சக்தி என அமெரிக்கா தற்போது கருதத் தொடங்கிவிட்டதாகச் சொல்லலாம். எனவே, காலங்கள் மாறும்போது காட்சிகள் மாறும் என்பதால், இந்தியாவின் முயற்சி வெற்றிபெறும் காலம் தொலைவில் இல்லை.

0 comments: