தலையங்கம் - 'கல்கி'

குண்டர் படையை வென்ற உறுதி!



மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் மெய்யான வெற்றி தேர்தல் கமிஷனுக்குத்தான்!

தொகுதி முழுவதும் அணு அணுவாக ஆராய்ந்து, வன்முறையாளர்களும் போலி வாக்காளர்களும் வெளியேற்றப்பட வழி செய்திருக்கிறது. வாக்காளர்களுக்கு லஞ்சம் தரப்படுவதைக் கண்டறிந்து, உடனடியாக அதை நிறுத்தாவிட்டால் தேர்தலே தள்ளிவைக்கப்படும் என்று எச்சா¢த்திருக்கிறது.

நீண்ட நெடும் நாட்களாகத் தொகுதியில் பணியாற்றி, செல்வாக்கை வளர்த்துக் கொண்ட காவல் துறையினரையும் அதிகாரங்களையும் பணிமாற்றம் செய்தாகவேண்டும் என்று போராடி சாதித்திருக்கிறது. காவல்துறையின் இடத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையையும் ராணுவத்தையும் கொண்டுவந்து நிறுத்தி, வாக்குச் சாவடிகளில் வாக்காளர்களுக்குப் பாதுகாப்பு அளித்திருக்கிறது. காவல் துறையினர் வாக்குச் சாவடிகளுக்கு வெளியேதான் (நூறு மீட்டருக்கு அப்பால்) கண்காணிப்புச் செய்திருக்கிறார்கள்!

வாக்குச் சாவடிகளில் வழக்கமான கண்காணிப்பாளர்களுடன் இருபது கூடுதலான உலாவும் கண்காணிப்பாளர்களை நியமித்திருக்கிறது. இவையெல்லாம் போதாதென்று சாவடிக்குச் சாவடி ரகசிய கண்காணிப்புக்கும் ஏற்பாடு செய்து, மக்கள் அச்சமின்றி வாக்களிக்க உதவியிருக்கிறது.

இது வரலாறு காணாத பந்தோபஸ்து ஆனதால், வழக்கத்துக்கும் அதிகமான வாக்குப்பதிவு நடந்தேறியிருக்கிறது. 75 சதவிகிதம் என்பது உத்தேசக் கணிப்பு. இது, இத் தொகுதியில் 2006 பொதுத் தேர்தலில்கூட நிகழாத விந்தை.

இத்தனை முயற்சிகளும் போர்க்கால எச்சரிக்கையும், குறைந்த அளவு வாக்காளர்களே உள்ள ஒரு சிறிய தொகுதிக்கு! அப்படியானால் பல்வேறு தொகுதிகளில் ஒரு சேர வாக்குப் பதிவு நடந்தால், தேர்தல் கமிஷன் என்ன பாடுபடவேண்டியிருக்கும்!

தேர்தல் வன்முறையும் முறைகேடுகளும் நமது அரசியல்வாதிகளால் செழிப்பாக வளர்க்கப்பட்டு, தேர்தல் கமிஷனுக்குச் சவால் விடுகிற அதே சமயத்தில், ஜனநாயகத்தையும் கேலிக்கூத்தாக மாற்றிவிட்டன. மக்கள் இயல்பாக தங்கள் ஜனநாயக கடமைகளைச் செய்வதற்கும் உரிமைகளை நிலை நாட்டுவதற்கும் ஏதுவான சூழல் இன்று தமிழகத்தில் கிடையாது என்பது மறுபடி நிரூபணமாகியிருக்கிறது. அரசியலில் புகுந்துவிட்ட குண்டர் கலாசாரமும் கட்சிகளிடையேயான ஆரோக்கியமற்ற பரஸ்பர விரோதமுமே இதற்குக் காரணம்!

மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தினூடே வன்முறை தலைகாட்டி யிருக்கிறது. தேர்தல் ஆணையாளர் நோ¢ல் வந்து பார்த்து, தேர்தலுக்குச் சில தினங்களுக்கு முன்புவரை அமைதியும் சகஜ நிலையும் திருப்திகரமாக இல்லை என்று கூறியிருக்கிறார்.

தலைவர்களோ, தேர்தல் கமிஷனின் அதிகாரத்தை மதிப்பதற்குப் பதிலாக, கேள்விக்குட்படுத்தியிருக்கிறார்கள். “தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால் உண்ணாவிரதம் இருப்பேன்” என்று தமிழக முதல்வர் சொன்னதாகவும் பிறகு சொல்லவில்லை என்றும் செய்திகள்! முதல்வர் அப்படிச் சொல்லாவிட்டாலும் முதல்வர் சொன்னதாக ஒரு மத்திய அமைச்சர் சொல்வதென்பதேகூட வரம்புமீறல்தான்.

இது மிரட்டலுக்குச் சமமாகும் என்று எடுத்துக் காட்டியதுடன், இந்த மிரட்டலுக்கோ அழுத்தத்துக்கோ தேர்தல் கமிஷன் பணிந்துவிடாமல் தேர்தலை ஒத்திவைக்கும் உரிமை தனக்கு உண்டு என்று உணர்ந்து, கடைசிவரை உறுதியாக இருந்திருக்கிறது.

இந்த உறுதியின் விளைவாக மதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தல் பெருமளவு அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது. ஆனால், ‘ஒரு கட்சி வேட்பாளரின் வெற்றி, ஜனநாயக நல்மரபுகளின் வெற்றியாகவும் மாறுவது எப்போது?’ என்கிற கேள்வி மக்கள் மனத்தில் நிலவத்தான் செய்கிறது.

0 comments: