WE(A)eKEND





சிம்பு - நயன்தாரா மீண்டும் காதல்


இரண்டு வருட பிரிவுக்கு பிறகு சிம்பு - நயன்தாரா ஜோடி, நடிகையின் த்ரிஷாவின் முயற்சியால் ஒன்று சேர்ந்தது. இருவரும் அரை மணிநேரம் தனிமையில் சந்தித்து மனம் விட்டு பேசினர்.

நடிகர் சிம்புவும், நயன்தாராவும் கடந்த 2 வருடத்துக்கு முன்பு காதல் ஜோடியாக வலம் வந்தனர். "வல்லவன்" படத்தில் சிம்புவுடன் நெருக்கமாக நடித்தார் நயன்தாரா. இதையடுத்து இவர்களுக்குள் நெருக்கம் அதிகமானது. திடீரென்று மனக்கசப்பு ஏற்பட்டு, ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகள் சுமத்தி பேட்டி அளித்தனர். இந்நிலையில் நயன்தாராவுடன் ஒரு அறையில் சிம்பு நெருக்கமாக இருப்பதுபோன்ற புகைப்படங்கள் இன்டர்நெட்டில் வெளியானது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. "இதை சிம்புதான் வெளியிட்டிருப்பார்" என்று நயன்தாரா தரப்பில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதுடன், "இனிமேல் அவருடன் சேர்ந்து நடிக்க மாட்டேன்" என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஐதராபாத்தில் "துளசி" என்ற படப்பிடிப்பில் நயன்தாரா நடித்துக் கொண்டிருந்தார். அவரை சந்திக்க சிம்பு சென்றார். நீண்ட நேரம் காத்திருந்தும் சிம்புவை நயன்தாரா சந்திக்கவில்லை. சிம்பு ஏமாற்றத்துடன் சென்னை திரும்பினார். மேலும் கடந்த ஒரு வருடமாக சென்னை பக்கமே தலை காட்டாமல் தெலுங்கு படங்களிலேயே நயன்தாரா கவனம் செலுத்தி வந்தார். சிம்புவின் போட்டியாளர் என்று திரையுலகினரால் கூறப்படும் தனுஷ் ஜோடியாக "யாரடி நீ மோகினி"யில் நயன்தாரா நடித்தார். அப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்தபோது அவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இருவரும் நிரந்தரமாக பிரிந்துவிட்டனர் என்று திரையுலகினரும், அவர்களது நண்பர்களும் முடிவு செய்தனர்.

இந்நிலையில் சிம்பு விவகாரத்தில் தற்போது பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
அஜீத் நடிக்கும் "ஏகன்" படத்தில் நவ்தீப்பும், "சத்யம்" படத்தில் விஷாலுடன் நயன்தாராவும் நடித்து வருகின்றனர். இவர்கள் அடிக்கடி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சந்திப்பது வழக்கம். சமீபத்தில் இந்த நண்பர்கள் குழு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்து சந்தித்தது. அதில் த்ரிஷாவும் கலந்துகொண்டார். பார்ட்டி ஆரம்பித்த அரை மணி நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத விதமாக திடீரென்று சிம்பு அங்கு வந்தார். அவரை அங்கு வரவழைத்தது த்ரிஷாதான் என்று கூறப்படுகிறது.

சிம்புவைக் கண்டதும் விஷால், நவ்தீப், த்ரிஷா எல்லோரும் கைதட்டி, கரகோஷம் செய்து வரவேற்றனர். நண்பர்கள் கூட்டத்தில் அமர்ந்திருந்த நயன்தாராவை கண்டதும் சிம்பு இமைகொட்டாமல் பார்த்தார். நயன்தாராவும் அதை ஆமோதிக்கும் விதமாக இதமான புன்னகையுடன் பார்த்தார்.

அங்கிருந்த இருக்கையில் அமர்ந்திருந்த நயன்தாராவை திடீரென்று சிம்பு கையைப் பிடித்து இழுத்து "உன்னிடம் தனியாக பேச வேண்டும் வா" என்று அழைத்தார். மறுப்பு சொல்லாமல் நயன்தாரா எழுந்து சிம்புவுடன் சென்றார். அங்கிருந்து மாயமான இருவரும் அரை மணி நேரத்துக்கு பிறகு சிரித்து பேசியபடியே திரும்பி வந்தனர். இருவரையும் மீண்டும் நண்பர்கள் குழு கைதட்டி கரகோஷத்துடன் வரவேற்றது. பிறகு சிம்பு அவர்களிடம் விடைபெற்று புறப்பட்டார். நயன்தாரா மட்டும் மவுனமாக அங்கே இருந்தார். இந்த திடீர் சந்திப்பு பற்றி கருத்து கூறிய ஒரு நடிகர், "சிம்பு, நயன்தாரா இடையேயான மனக்கசப்பு நீங்கி விட்டது. இருவருமே சேர்ந்து படங்களில் நடிக்க வாய்ப்பிருக்கிறது" என்றார்.
இந்த சந்திப்பு கோடம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தரவு - தமிழ்முரசு