தலையங்கம் - 'விடுதலை'


நடந்து முடிந்த மதுரை மேற்கு சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டை தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்கள், தேர்தல் முடிவுக்குப்பின் வெளிப்படுத்தியிருக்கிறார். அந்தத் தகவல்களைப் பார்க்கும்பொழுது, எந்த அளவுக்குத் தேர்தல் ஆணையம் எல்லை மீறிச் சென்று இருக்கிறது; அளவுக்கு அதிகமான ஈடுபாட்டைக் காட்டியிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

வேட்பு மனுவைத் தாக்கல் செய்யச் சென்றபோது அய்ந்து பேர்களுக்குமேல் சென்றார்கள் என்று காரணம் கூறி,மதுரை மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், மதுரை மாநகர காவல்துறை ஆணையர், மதுரை மத்திய தொகுதி தேர்தல் அதிகாரிகளை உடனடியாக மாற்றவேண்டும் என்று கூறி, ஒவ்வொரு அதிகாரிக்கும் பதிலாக மூன்று பெயர்களைக் கொண்ட பட்டியலை அனுப்பவேண்டும் என்று தேர்தல் ஆணையம் ஆணையிட்டது. அதனை ஏற்றுக்கொண்டு அப்படி ஒரு பட்டியலை தமிழக அரசு தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியது.


நியாயப்படி தேர்தல் ஆணையம் என்ன செய்திருக்க வேண்டும்? அந்தப் பட்டியலிலிருந்து ஒவ்வொரு பதவிக்கும் ஒருவரைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். ஆனால், தேர்தல் ஆணையம் எப்படி நடந்துகொண்டு இருக்கிறது?

மதுரைக் கோட்டாட்சியர் பதவிக்குத் தமிழக அரசு அனுப்பியிருந்த பட்டியலில் இடம்பெறாத ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு அவர் பெயரைப் பட்டியலில் சேர்த்து அனுப்புமாறு தேர்தல் ஆணையம் ஆணைப் பிறப்பித்ததாம்.

மதுரை மாநகரக் காவல் துறை ஆணையர் பதவிக்குத் தமிழக அரசு அனுப்பிய பட்டியலில் குறிப்பிடப்பட்ட மூவரையும் புறக்கணித்துவிட்டு, தேர்தல் ஆணையமே ஒருவரைக் குறிப்பிட்டு, அவரிடம் பொறுப்புகளை ஒப்படைக்கவேண்டும் என்றும் ஆணை பிறப்பித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் சகிக்க முடியாத இந்த நடவடிக்கைகளைப்பற்றி தமிழக முதலமைச்சர் அப்பொழுது எந்தவித விமர்சனத்துக்கும் உட்படுத்தாமல், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றியும் உள்ளார்.


செல்வி ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் இந்த மாதிரி தேர்தல் ஆணையம் அத்துமீறி நடந்துகொண்டு இருந்தால், எத்தகைய கடுமையான கொடுஞ்சொற்களால் தேர்தல் ஆணையர் அபிஷேகம் செய்யப்பட்டு இருப்பார் என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும்.

கலைஞர் அவர்கள் முதிர்ச்சியுள்ள, பக்குவம் நிறைந்தவர் என்கிற காரணத்தால், தேர்தல் ஆணையம் ஆணை பிறப்பித்த நேரத்தில், அதுபற்றி வாய்த் திறக்காமல், அதேநேரத்தில் தேர்தல் முடிவுக்குப் பின் சொல்ல வேண்டிய சரியான நேரத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்.


இதில் கவனிக்கத்தக்கது என்னவென்றால், தேர்தல் ஆணையம் இப்படி வழமைக்கு மாறாக, அதிரடியாக நடந்துகொண்ட நிலையிலும், தி.மு.க., கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார் என்பதுதான்.

செல்வி ஜெயலலிதா அவர்கள் 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தது தொடர்பான வழக்கில்கூட தேர்தல் ஆணையம் எப்படி நடந்துகொண்டு இருக்கிறது?

ஒருவர் இரண்டு தொகுதிக்குமேல் போட்டியிடக் கூடாது என்கிற ஆணை 2002 இல் தான் போடப்பட்டது. ஆனால், ஜெயலலிதா 2001--லேயே அவ்வாறு நடந்துகொண்டார்.இந்த நிலையில் தேர்தல் ஆணையம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் வாதாடிய வக்கீல் கேட்டுக்கொண்டார். தேர்தல் ஆணையமே செல்வி ஜெயலலிதாவுக்குச் சாதகமான ஒரு சட்டப் பிரச்சினையை எடுத்துக் கொடுக்கிறது என்பதைக் கவனிக்கவேண்டும்.

மும்பையிலிருந்து முன்பு வெளிவந்த `கரண்ட்’ பத்திரிகையில் ஜாதிக்குறி என்ற ஒரு கட்டுரையை டி.எஃப். காரக்கா என்பவர் எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையின் சாராம்சம்தான் இப்பொழுது நினைவிற்கு வந்து தொலைகிறது.
ஒரு இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையரே முகாம் போட்டு பணியாற்றியது என்பதை இப்பொழுதுதான் நாடு கேள்விப்படுகிறது.


என்னதான் ஆட்டம் போட்டாலும், தமிழ்நாட்டு மக்கள் சரியாகவே எடை போடக் கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பதை சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் இப்பொழுதாவது புரிந்துகொண்டிருக்க வேண்டுமே!

0 comments: