கூடங்குளம் - கதிரியக்க அபாயம்

“பூச்சி மருந்தில்கூட அனுமதிக்கப்பட்ட அளவு என்பது (permissible level) உண்டு. ஆனால், கதிரியக்கத்தைப் பொறுத்த வரை பாதுகாப்பான அளவு (safe dose) என்பதே கிடையாது.” அணுக் கதிரியக்கத்தின் விளைவுகள் தொடர்பாக ஐ.நா. அறிவியல் குழு இவ்வாறு அறிக்கை அளித்திருக்கிறது.

கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னை மீண்டும் முழு வீச்சோடு தலையெடுத்திருக்கிறது. ஏற்கெனவே, அங்குள்ள இரண்டு அணு உலைகள் போதாதென்று மேலும் நான்கு அணு உலைகள் அமைக்க முடிவெடுத்துச் செயல்படுத்தவும் ஆரம்பித்துவிட்டது மத்திய அரசு.

கூடங்குளம் என்று குறிப்பிடப்பட்டாலும் அதற்கு அருகே உள்ளகிராமமான இடிந்தகரையில்தான் அணுமின் நிலையம் நிறுவப்பட்டிருக்கிறது. ரஷ்யாவின் உதவியுடன் நிறுவப்படும் இந்த அணுமின் நிலையம் கடல் நீரைக் கொண்டு அணு உலைகளைக் குளிர்ப்படுத்துகிறது. இதன் காரணமாகத்தான் கன்னியாகுமா¢க்கு அருகிலுள்ள கூடங்குளத்தில் இதை நிறுவியிருக்கிறார்கள்.

கூடங்குளம் பகுதி மக்களின் எதிர்ப்பும் அதிகமாகிக் கொண்டே இருக்க, அரசும் தன் முடிவில் உறுதியாகத்தான் இருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது.

“இதெல்லாம் கண்துடைப்பு நாடகம். நான்கு அணு உலைகளுக்குமான அனைத்து திட்டங்களையும் எல்லா ஏற்பாடுகளையும் அரசு செய்துவிட்டது. இதற்கான ஒப்பந்தங்களும் ரஷ்ய அதிகாரிகளுடன் கையெழுத்திடப்பட்டுவிட்டன. பிறகென்ன கருத்துக் கேட்புக் கூட்டம்?” என்று கொதிக்கிறார்கள் மக்கள்.

இது குறித்துச் சுற்றுப்புற ஆய்வாளரும் லயோலா கல்லூரிப் பேராசிரியருமான டாக்டர்
வின்சென்ட்டைக் கேட்டபோது “நம் நாட்டில் மின்சாரம் மிக அதிகமாகத் தேவைப்படுகிறது. மரபுசார்ந்த எரிபொருட்கள் (பெட்ரோல், டீசல் போன்றவை) மிக வேகமாகக் குறைந்து வருகின்றன. மரபுசாராத சக்திகள் - காற்றாலைகள், சூரியசக்தி போன்றவை மிக அதிக தயாரிப்புச் செலவு பிடிப்பவை. தவிர பொது மக்களால் இவை முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

வளர்ந்து வரும் நாடு என்பதிலிருந்து வளர்ந்த நாடு என்ற நிலைக்கு இந்தியா சென்று கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் அணுசக்தியை மாற்றாகப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது ஏற்கத்தக்கது தான். பாதுகாப்பு உணர்வு, வீண் பொருட்கள் வெளியேற்றம் இந்த இரண்டு விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். அவ்வளவுதான். இந்த இரண்டையும் கவனித்து கண்காணிக்கும் அளவுக்குத் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. எனவே, கவலை வேண்டாம்.
அமரிக்காவிலிருந்து பாகிஸ்தான் வரை அணு சக்தியைப் பயன்படுத்துகிறார்கள். இந்த நிலையில் நம் நாடும் சுயச் சார்போடு விளங்க அணுசக்தி உற்பத்தி அவசியம்தான் என்றார். ஆனால், கல்பாக்கம் ‘சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு மருத்துவக் குழு’வின் உறுப்பினரான டாக்டர் புகழேந்தி −ந்தக் கருத்திலிருந்து வேறுபடுகிறார்.

“தமிழகம் மிகவும் எச்சரீக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது. வரவிருக்கும் அணு உலைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் கல்பாக்கம், கூடங்குளம் ஆகிய இரண்டிலுமாகச் சேர்ந்து, மொத்தம் பத்து அணு உலைகள் தமிழகத்தில் செயல்படப் போகின்றன.

“அணுமின் நிலையம் தேவையா? என்பது முதல் கேள்வி. இதனால் பாதிப்பு உண்டா? என்பது அடுத்த கேள்வி.

“அணுசக்தியின் மூலம் மின்சாரம் என்று கூறப்படுவதே ஒரு பொய். அணுகுண்டு தயாரிக்கதான் இந்த உலைகள் உருவாக்கப்படுகின்றன. மின்சாரம் என்பது இதில் ஒரு உபரிப் பொருள், அவ்வளவு தான். தவிர, அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பது என்பது அதிக செலவு
பிடிப்பது. இதனால் மக்களுக்குப் பயன் இராது.

“மாறாக, கதிரியக்கம் என்பது நாம் எதிர்கொள்ள இருக்கும் பேராபத்தாக இருக்கப் போகிறது.

“2005 ஜனவரி 31 அன்று அமரிக்காவின் பொது சுகாதாரத் துறை அளித்த அறிக்கையின்படி எக்ஸ்ரே, நியூட்ரான், காமா கதிர்கள் ஆகியவை கார்சினோஜின்கள் என்று அங்கீகரிக்கப் பட்டுள்ளன.கார்சினோஜின் என்பது புற்றுநோயை உண்டாக்கும் காரணி. இதுவரை இவற்றால் புற்றுநோய் உண்டாக வாய்ப்பு உண்டு என்பதுபோல் கூறிக் கொண்டிருந்தார்கள். இப்போது இந்தப் பாதிப்புகள் நிச்சயம் என்று உறுதி செய்திருக்கிறார்கள்.

கல்பாக்கத்தில் அறிவியல் பூர்வமான ஒரு சோதனையை மேற்கொண்டோம். ‘மல்டிபிள் மைலோமா’ என்ற நோய் குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டோம். இது
கதிரியக்கத்தால் எலும்பு மஜ்ஜையில் உருவாகக் கூடிய ஒரு வகை புற்றுநோய். கல்பாக்கம் பகுதியில் ஒன்றரை வருடங்களுக்கு நடைபெற்ற இந்த ஆராய்ச்சியில் அணு உலைகளில்
பணியாற்றிய இரண்டு பேரும், கல்பாக்கம் நகரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணியும் இந்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

சென்னை அடையாறு புற்றுநோய்க் கழகம் ‘ஆண்களில் ஒருலட்சத்தில் 1.7 பேரும், பெண்களில் ஒரு லட்சத்தில் 0.7 லட்சம் பேரும் இதனால் இறக்கிறார்கள்” என்று சொல்லியிருக்கிறது. அதாவது, ஒரு லட்சத்துக்கு 2.4 நபர்கள்.

ஆனால் கல்பாக்கத்தின் மக்கள் தொகை அதிகபட்சம் 25,000தான். பாதிப்போ மூன்று பேருக்கு அதாவது, பொதுவான விகிதத்தைவிட நான்கு மடங்கு அதிகம்!

“மேலும் ஜப்பான், அமரிக்கா போன்ற நாடுகளில் இப்படிப் பாதிக்கப் பட்டவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை அளிப்பார்கள். அமொ¢க்காவில் இதற்கெனவே ஒரு (எனர்ஜி எம்ப்ளாயீஸ் ஆக்ட்) சட்டம் உண்டு. இங்கே சட்டமும் கிடையாது. இழப்பீடும் கிடையாது” என்று குமுறினார்.

இந்த வாதங்கள் பரிசீலிக்கப்பட வேண்டியவை. சோவியத் யூனியனின் (இன்றைய உக்ரைன்) செர்னோபில் அணுமின் நிலைய விபத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அணுசக்தி இல்லாமலேயேகூட விஷவாயுவின் கோரத் தாண்டவத்தை போபாலில் அனுபவித்திருக்கிறோம். மார்ச் 1999-ல் கல்பாக்கத்தில் கனநீர்க் (heavy water) கசிவு ஏற்பட்டபோது ‘அதெல்லாம் அனுமதிக்கப்பட்டுள்ள அளவுக்குள்தான்’ என்றனர் அதிகாரிகள்.

‘இன்னும் எதையெல்லாம் அனுமதிக்கப் போகிறோம்?’ என்பதுதான் அச்சுறுத்தும் கேள்வி.


தரவு - கல்கி

1 comments:

June 25, 2007 at 10:57 AM காட்டாறு said...

இத எங்கே போய் சொல்லுறது... நான் கல்லூரியில் படிக்கும் போது கூடங்குளத்தில் அணுமின் நிலையம் ஆரம்பிக்கக் கூடாதுன்னு கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தது இப்போ நடந்த மாதிரி இருக்குது. ம்ம்ம்ம்ம்ம்.... நம்ம மக்கள் ஏன் தான் இன்றைய நலன் தான் நாளைய நலனுமின்னு நெனைக்க மாட்டேன்றாங்களோ! :(