'என் உயிரினும் மேலான..'.- விமர்சனம்

கண்டதும் காதல். காதலர்களுக்குள் மோதல். பிறகு எப்படி சேர்தல்? இதுதான் என் உயிரினும் மேலான...

அறிமுகமான புதிதில் மாதவன் எப்படி இருந்தாரோ அப்படி இருக்கிறார் புதுமுகம் அஜீத் சந்தர். காதல் காட்சிகளில் குறும்பு. கனவுப்பாடல்களில் அரும்பு. காதலால் இளைக்கையில் துரும்பு என்று பல்வேறு பரிமாணங்கள். நம்பிக்கைக்குரிய இந்த புதியவார்ப்பு வரும் படங்களில் இன்னும் அழுத்தமாக முத்திரை பதிக்கலாம். பணக்காரரான இவர் ஊட்டிக்கு போகும்போது ராதிகாமேனனை சந்திக்கிறார். அவரிடம் ஒரு Ôபளார்Õ வாங்குகிறார். பிறகு தன் தவறை எண்ணி தவிக்கும் ராதிகாவை விட்டு விட்டு சென்னைக்கு வந்து அவர் நினைவாகவே இருக்கிறார்.

இதற்கிடையில் சென்னைக்கு மாற்றலாகி வரும் ராதிகாமேனனின் குடும்பம் எதிர் எதிர் வீட்டில் வசிக்க நேர்கிறது. காதல் வளர்க்கிறார்கள். ஆனால், முறைமாமன் ரூபத்தில் வில்லன் வர, என்னாச்சு என்பது மீதி.

பக்கத்து வீட்டு பெண் மாதிரி இருக்கிறார் ராதிகாமேனன். அடிக்கடி மழையில் நனைகிறார். நமக்கு பிடிக்கிறது ஜலதோஷம். இவருடைய அப்பா தொழிலதிபர் என்று நினைத்துக் கொண்டிருக்கையில் பெரிய போலீஸ் அதிகாரி என்று பிளேட்டை திருப்பி போடுகிறார்கள். அவரும் தப்பியோடும் காதலர்களை பிடிக்க செக்போஸ்ட் சோதனையெல்லாம் செய்கிறார். அதையும் மீறி தப்பியோடும் காதலர்களிடம் ஒரு படபடப்பு வேண்டாமா? ஏதோ தேனிலவுக்கு போவது போல் போகிறார்கள். ராதிகாமேனனின் தம்பியாக நடித்திருக்கும் அந்த அதிக பிரசங்கி பிஞ்சிலே முற்றல் கேஸ்.

திடீர் மாப்பிள்ளையாக 12 வது ரீலில் அறிமுகமாகும் ரஞ்சித், நரிச்சிரிப்பு சிரிக்கிறார். கிளியை வளர்த்து கில்லாடியிடம் கொடுக்கிறார்களே என்ற தவிப்பை ஏற்படுத்துகிறார். நல்லவேளையாக தாய்மார்களின் சாபத்தை வாங்காமல் Ôபல்டிÕ அடித்து கைத்தட்டல்களையும் வாங்கிக் கொள்கிறார்.

இதுவரைக்கும் வடிவேலுவுடன் வந்து வயிற்றை பதம் பார்த்த சிங்கமுத்து இந்த படத்தில் ஸோலோவாக வந்து ட்ரை பண்ணியிருக்கிறார். மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். இருந்தாலும், சில காட்சிகள் பலே. அதிலும் காதல் ஜோடி ஒன்று இவர் சைக்கிளை இரவல் கேட்டு Ôஎஸ்கேப்Õ ஆவதும் அதற்காக இவர் தர்ம அடி வாங்குவதும் வெடிச்சிரிப்பு.

மற்றொரு காமெடி நடிகராக கருணாஸ். பல காட்சிகள் பாதியிலேயே கட் செய்யப்பட்டது போல் இருக்கிறது. இந்த படத்தை பொறுத்தவரை கருÔலாஸ்Õ.

இசை தேவா. மினிமம் கியாரண்டிக்காரர் ஆயிற்றே. ஐந்துக்கு மூன்று பழுதில்லை.

வசனங்கள் பாலகுமாரனாம். வயதில் பெரியவரானாலும் எழுத்தில் இளையவர். ஆனால்...?

உயிரினும் மேலானது காதல்தான். உயிரை கொடுத்து மெனக்கெட்டிருந்தால், வெற்றிகரமாக பிரசண்ட் செய்திருக்கலாமோ?

தரவு - தமிழ்சினிமா.காம்

0 comments: