4 நாட்களில் நல்ல முடிவு ஏற்படும்'' - நடிகர் ஸ்ரீகாந்த்

"ஒரு பெண்ணை ஏமாற்றும் எண்ணம் எனக்கு கிடையாது. வந்தனா பிரச்சினையில், வக்கீல்கள் மூலம் பேச்சுவார்த்தை நடக்கிறது. 4 நாட்களில் நல்ல முடிவு ஏற்படும்" என்று நடிகர் ஸ்ரீகாந்த் கூறினார்.

'ரோஜாக்கூட்டம்,' `ஏப்ரல் மாதத்தில்,' `பார்த்திபன் கனவு,' `ஜுட்,' `பம்பரக்கண்ணாலே,' `கனா கண்டேன்' உள்பட பல படங்களில் கதாநாயகனாக நடித்த ஸ்ரீகாந்த், வந்தனா என்ற பெண்ணை திருமணம் செய்யப்போவதாக 2 மாதங்களுக்கு முன்பு அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து வந்தனா குடும்பத்தினர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. இந்த தகவல் காரணமாக, ஸ்ரீகாந்துக்கும், வந்தனாவுக்கும் நடைபெற இருந்த திருமணத்தை ஸ்ரீகாந்த் குடும்பத்தினர் ரத்து செய்தார்கள்.

இந்த சூழ்நிலையில், வந்தனா திடீரென்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஸ்ரீகாந்த் வீட்டில் குடியேறினார். தனக்கும், ஸ்ரீகாந்துக்கும் ஏற்கனவே திருமணம் நடந்துவிட்டதாக அறிவித்தார். "ஸ்ரீகாந்த் எனக்கு முறைப்படி தாலி கட்டியிருக்கிறார். இனிமேல் இந்த வீட்டில்தான் இருப்பேன்" என்று அவர் கூறினார்.

வந்தனா அந்த வீட்டை விட்டு வெளியேற மறுத்ததால், ஸ்ரீகாந்தும், அவருடைய பெற்றோர்களும் தங்கள் வீட்டை விட்டு வெளியேறினார்கள். சொந்த வீடு இருந்தும் ஸ்ரீகாந்தும், அவருடைய பெற்றோர்களும் கடந்த 2 மாதங்களாக ஓட்டல்களிலும், உறவினர் வீடுகளிலும் மாறி மாறி தங்கி வருகிறார்கள்.

இந்த நிலையில், பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவருவதற்காக ஸ்ரீகாந்த், வந்தனாவை ஊர் அறிய திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்ற தகவல் பரவியது.

இதுபற்றி நடிகர் ஸ்ரீகாந்திடம், `தினத்தந்தி' நிருபர் விசாரித்தபோது, அவர் கூறியதாவது:-

"ஒரு பெண்ணை ஏமாற்றும் எண்ணம் எனக்கு இல்லை. எல்லோருடைய வாழ்க்கையிலும் பிரச்சினைகள் உண்டு. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக, என் வாழ்க்கையிலும் பிரச்சினை ஏற்பட்டு விட்டது. நான் நடிகர் என்பதால், என் பிரச்சினை பெரிதுபடுத்தப்பட்டுவிட்டது.

மன்னிப்பது, மனித சுபாவம். நல்ல விஷயம். எங்கள் பிரச்சினை பற்றி நாங்கள் வக்கீல்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறோம். அதில், நல்ல முடிவு ஏற்படும். அதை, 4 நாட்களில் தெரிவிக்கிறேன்."

இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறினார்.

- தினத்தந்தி

0 comments: