'விடுதலை' தலையங்கம்

`சிவ சிவாவும்`ஓம் சக்தியும்!




பெண்களுக்கான விடுதலை மாநாடுகள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் ஒரு முக்கியமானது தீப்பொறி போன்ற மனச்சான்றைச் சுடும் பிரச்சினையாகும்.மக்கள் தொகையில் பெண்களின் எண்ணிக்கை வீழ்ச்சியுறும் பிரச்சினைதான் அது. உலகம் பூராவும் இந்தப் பிரச்சினை இருக்கிறது என்று சமாதானம் சொல்லுவதைவிட, இந்நாட்டில் நிலவும் இந்தச் சூழ்நிலை கவனமுடன் - கவலையுடன் சீர்தூக்கிப் பார்க்கப்படவேண்டிய ஒன்றாகும்.

1901 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கின்படி ஆயிரம் ஆண்களுக்கு 948 பெண் குழந்தைகள் இந்தியாவில் இருந்தன. 2001 ஆம் ஆண்டில் அது 939 ஆகக் குறைந்துள்ளது. அரியானா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் 800 பெண் குழந்தைகளே என்று கணக்குக் கூறப்படுகிறது. இதன் காரணமாக உத்தரப்பிரதேசம், பிகார் மாநிலங்களிலிருந்து ஏழைப் பெண்கள் விலை கொடுத்து வாங்கப்பட்டு, இந்த மாநிலங்களுக்குக் கொண்டு வரப்பட்டு ஒரு குடும்பத்தில் பல ஆண்களுக்கு திரவுபதையாக ஆக்கப்படுகின்றனராம். தங்கள் காம இச்சைக்கான கழிப்பிடமாகப் பெண்களைக் கருதும் கேவலம் அரங்கேறிக் கொண்டு இருக்கிறது.

கருவில் இருக்கும்போதே, அது ஆணா, பெண்ணா என்று அறிவியல் ரீதியாகக் கண்டுபிடிக்கப்பட்டு, பெண் சிசு என்றால் கருவிலேயே அழித்துவிடுவது என்ற கொடுமை நாட்டில் நடந்து கொண்டு இருக்கிறது. கடந்த இருபது ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் ஒரு கோடி பெண் சிசுக்கள் இவ்வாறாக அழிக்கப்பட்டுள்ளதாக நடுவண் அரசு தெரிவித்துள்ளது.
இவ்வார `கல்கி இதழில் இதுபற்றிய பல விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பலரிடமிருந்தும் கருத்துகள் கேட்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்தமான சமூக அமைப்பே இதற்குக் காரணம். பெண்களுக்குப் பாதகமாக அமையும் தவறான மத நம்பிக் கைகளையும், மதச் சடங்குகளையும் கடைப்பிடித்து வாழ்ந்து வரும் பெரும்பான்மை மக்களின் மனநிலை மாற்றங்களினால் மட்டுமே இவற்றுக்குத் தீர்வு காண இயலும்.
பெண்கள் எண்ணிக்கை குறைய குறைய ஆண்கள் பெண்களை வேட்டையாடும் கொடுமை ஏற்படக்கூடும். பெண் கடத்தல் அதிகமாகக் கூடும். ஒரு பெண் பல ஆண்களைத் திரு மணம் செய்துகொள்வது என்பது கட்டாயமாகக் கூட ஆகக்கூடும் என்பது போன்ற கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
பெண் சிசுக் கொலை என்பதை இந்திய அரசமைப்புச் சட்டம் கொலை என்ற பிரிவின்கீழ்தான் (302) கொண்டு வருகிறது. இதில் யார் குற்றவாளியாக ஆக்கப்படுகிறார் என்றால், குழந்தையின் தாய்தான்; இது ஒரு சரியான முடிவாக இருக்க முடியாது. சிசுக் கொலைக்கு ஒரு குடும்பமோ, சுற்றமோகூட காரணமாக இருக்கக்கூடும்.

சிசுக் கொலைக்காக இதுவரை தண்டிக்கப்பட்டவர்கள் யார்? ஏட்டுச் சுரைக்காயாகத்தான் சட்டம் இருக்கிறதே தவிர, நடைமுறையில் பூச்சியம் தான்.நான்கு இடங்களில் தண்டிக்கப்பட்டார்கள் என்கிற நிலை உருவாகும்போது, விளம்பரம் ஆகும்போது அவ்வளவு எளிதாக சிசுக் கொலையில் ஈடுபடமாட்டார்கள்; அச்சம் அவர்களை உலுக்கக் கூடும்.

சிசு ஆணா, பெண்ணா என்று மருத்துவ ரீதியாகச் சொல்லக்கூடாது என்று சட்டம் இருக்கத்தான் செய்கிறது - அதுவும் ஏட்டுச் சுரைக்காய்தான்.சில சொல்லாடல்களை அவர்கள் வைத்துக் கொண்டுள்ள னராம். `சிவ சிவா என்றால் ஆண் குழந்தையாகும்; `ஓம் சக்தி என்றால் பெண் குழந்தையாம். நம் நாட்டு மதம் எவ்வளவுக் கேவலமான காரியங்களுக்குப் பயன்படுகிறது என்பதை இதன்மூலம் தெரிந்துகொள்ளலாம்.

ஆணுக்கு நிகராக பெண்களுக்கு எல்லா வாய்ப்புகளும், உரிமைகளும் (கல்வி, வேலை வாய்ப்பு, பொருளீட்டல்) கிடைக்க உத்தரவாதம் செய்யப்படுமேயானால், பெண்கள் சுமை என்ற எண்ணம் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும் என்பது தந்தை பெரியாரின் முடிவு.
தந்தை பெரியார் அவர்களின் சிந்தனை வெளிச்சம்தான் இந்த இருளுக்குக் கிடைக்கும் விடையாக இருக்க முடியும்.

0 comments: