'விடுதலை' - தலையங்கம்

மோடி அரசின் பாசிசம்



விண்வெளியில் பல மாதங்கள் தங்கி ஆய்வு செய்து சாதனை படைத்தவர் சுனிதா வில்லியம்ஸ். உலகம் முழுமையும் இதற்காகப் பாராட்டு கிடைத்தது. அதுவும் பெண் ஒருவர் இந்தச் சாதனையைச் செய்ததற்காகக் கூடுதல் புகழும் கிடைத்தது.

அவரின் பூர்வீகம் குஜராத் மாநிலம் - அவரின் உறவுக்காரர்கள் இன்னும் குஜராத் மாநிலத்தில் இருக்கிறார்கள். சுனிதா வில்லியம்ஸ் இந்தியாவுக்கு, குறிப்பாக குஜராத்துக்கு வர விரும்பினார். குஜராத் ஏடுகளிலும் அந்த செய்தி வெளிவந்தபோது, பொதுமக்கள் மத்தியிலே நல் வரவேற்பும் இருந்தது.

ஆனாலும், அம்மாநில முதலமைச்சரான நரேந்திர மோடிக்கோ சுனிதா வில்லியம்ஸ் குஜராத் வருவதில் விருப்பமில்லை. ``சுனிதா இந்தியப் பெண் அல்ல - அவர் சாதனையால் நமக்கு ஒன்றும் பெருமை வந்துவிடப் போவதில்லை - அவர் வருகையை நான் அங்கீகரிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார்.

மோடியைப்பற்றி அறிந்தவர்களுக்கு இது ஒன்றும் ஆச்சரியமாக இருக்காது. பா.ஜ.க.,வைச் சேர்ந்தவர்களின் பார்வையெல்லாம் ஒரு வழிப்பாதைதான் - பாசிசப் பாதைதான். ``நீரோ மன்னன் என்று உச்சநீதி மன்றத்தால் படம் பிடித்துக் காட்டப்பட்டவராயிற்றே - பின் எப்படி நடந்துகொள்வார்?

சுனிதாவின் பெயரை ஒட்டி வில்லியம்ஸ் என்று இருப்பது அவர் கண்களை உறுத்தக்கூடும். காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றக்கூடும் - மனதைக் கோடரியாகப் பிளக்கவும் செய்யும். அப்படிப் பார்க்கப் போனால், மோடி பறந்து செல்லும் விமானத்தைக்கூட முதலில் கண்டுபிடித்த ரைட் சகோதரர்கள் கூட கிறித்தவர்கள் தான். ரயில் என்ஜினைக் கண்டுபிடித்த ஸ்டீவன்சன் கூட அந்த மதத்துக்காரர்தான். மின்சாரத்தைக் கண்டு பிடித்தவர்களும் அவர்களே!

கிறித்தவர்கள் கண்டுபிடித்ததை நான் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்று அஞ்ஞாத வாசம் செய்யப் போகிறாரா?இந்த 2007 ஆம் ஆண்டிலும் இத்தகு மனிதர்கள் இருக்கிறார்களே - அதுவும் மிக முக்கியமாக ஆட்சிப் பொறுப்பிலும் இருக்கிறார்களே என்பதை எண்ணும் போது, எந்த அளவுக்கு வாக்காளர்கள் மத்தியில் நஞ்சைப் புகுத்தி வைத்திருக்கின்றனர் என்று எண்ணும் போது வேதனையும், வெட்கமும் தான் மிஞ்சுகின்றன.

இன்னொரு காரணமும் கசிந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் முன்னாள் பா.ஜ.க.,வைச் சேர்ந்தவரும், பின்னாளில் மோடிக்கு எதிரணியாகச் சென்றவருமான ஒருவரின் தூரத்து உறவுக்காரராம் இந்த சுனிதா. அதன் காரணமாகவும் மோடிக்கு வெறுப்பு என்று கூறப்படுகிறது.
தனக்கு எதிராக இருப்பவர்கள், தம் கருத்துக்கு மாறாகயிருப்பவர்கள் யாராக இருந்தாலும் வெறுக்கத் தகுந்தவர்கள் என்ற மன நோய்க்காரர்களாக காவி வட்டாரம் இருப்பதையும் இது காட்டுகிறது.

இப்படி ஒரு மனப்பான்மை அவர்களுக்கு இல்லா விட்டால், குஜராத் மாநிலத்தில் மதவெறியின் காரணமாக ஆயிரக்கணக்கானவர்களை நரவேட்டை ஆடித் தீர்த்து இருப்பார்களா?

தேர்தல் நேரம் வருகிற காரணத்தால், சுனிதா வில்லியம்ஸ் பிரச்சினை குஜராத் மாநிலத்தில் சில அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாக சுனிதாவின் வருகையைக் குறித்து மோடி எதிர்க்க வேண்டாம் என்று அவருக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளதாம்.

குஜராத் பல்கலைக் கழகம் சுனிதாவுக்கு அழைப்புக் கொடுத்துள்ளது. அந்த விழாவில் பங்கேற்குமாறு முதலமைச்சர் நரேந்திர மோடிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றாலும், இதுவரை அவர் இசைவு தெரிவிக்கவில்லையாம்.

பா.ஜ.க.,வின் அரசியல், தேசியம், இந்துத்துவா பார்வை எவ்வளவு மோசமானது என்பதைத் தெரிந்து கொள்ள இதுவும் ஒரு சரியான எடுத்துக்காட்டாகும்.

0 comments: