.விடுதலை - தலையங்கம்

குடிசைகளும் - கோபுரங்களும்!

நகர்ப்புற வறுமை ஒழிப்புத் துறையின் மத்திய அமைச்சர் குமாரி செல்ஜா மக்களவையில் (28.8.2007) வெளிப்படுத்தியுள்ள ஒரு தகவல் -இந்தியா எந்த இடத்தில் உழலுகிறது என்பதற்கான கண்கண்ட எடுத்துக்காட்டாகும்.

"2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப் பின்படி 6 கோடியே 80 லட்சம் மக்கள் இந்திய நகர்ப் புறங்களில் உள்ள குடிசைகளில் வாழ்ந்து வருகின்றனர். 1981 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 2 கோடியே 79 லட்சம் மக்கள் நகர்ப்புற குடிசைகளில் வாழ்ந்துள்ளனர். 20 ஆண்டுகளில் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தொகை இரு மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது. 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி `கிரேட் மும்பை நகரின் மொத்த மக்கள் தொகையில் 54.1 சதவிகிதம் பேர் குடிசைப் பகுதிகளில் வாழ்கின்றனர். அடுத்ததாக, மீரட் நகரில் 44.1 சதவிகிதமும், நாக்பூரில் 35.9 சதவிகிதமும், கொல்கத்தாவில் 32.5 சதவிகித மக்களும் குடிசைப் பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். கணக்கெடுப்பின்படி, தேசிய தலைநகரில் 18.7 சதவிகித மக்கள் குடிசைப் பகுதிகளில் வசிக்கின்றனர் என்றும் குறிப்பிட்டார் அமைச்சர்.

நாடு வளர்ச்சித் திசையில் அதிவேகத்தில் பாய்கிறது என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு இருந்தாலும், இந்தப் புள்ளி விவரங்கள், அந்தத் தகவல்களைக் கேலிக் குறியாக்கி விட்டன.
பொருளாதார வளர்ச்சி இருக்குமானால், சேரிகளின் எண்ணிக்கை எப்படி பெருக முடியும் என்பது அடிப்படையான ஒரு கேள்வியாகும்.

ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசைப் பகுதிகள் மும்பையைச் சேர்ந்த தாராவியில்தான் இருக்கிறது. இந்தத் தாராவியின் மொத்த குத்தகைக்காரர்கள் யார் என்றால், நம் தமிழர்கள்தாம்.
இது ஒரு பக்கத்தின் நிலை என்றால், இன்னொரு பக்கத்தில் 36 மகா கோடீசுவரர்கள் இந்தியாவில்; 10 லட்சம் ரூபாய்க்குமேல் ஆண்டு ஒன்றுக்கு வருமான வரி கட்டுபவர்கள் 5 லட்சத்து 62 பேர்களாம்.

36 கோடீசுவரர்களின் கையிருப்பு ரூ.8 லட்சம் கோடியைத் தாண்டுகிறது.
இந்தியாவின் ஆண்டு வரவு - செலவு என்ன தெரியுமா? ஆறு லட்சம் கோடி ரூபாய்தான். இந்திய அரசாங் கத்தைவிட பணக்காரர்கள் 36 பேர் இந்தியாவில் கொடி கட்டிப் பறந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் இந்தி யாவை ஆட்டிப் படைக்காமல் என்ன செய்வார்கள்? அரசுக்கு வரி கட்டாமல் சவால் விடுபவர்கள் இன்னொரு பக்கம்.

சமச்சீரான வளர்ச்சி இந்தியாவில் இல்லை என்பதற்கு இவை எல்லாம் அடையாளங்கள்தாம்.
சேரிகள் என்றால் அவற்றின் பொருள் என்ன? சுகாதார வசதிகள் கிடையாது. மழை, வெயில்களுக்குப் பாதுகாப்பு இல்லை. இங்கு வாழ்பவர்கள் அன்றாடக் கூலிகள். அன்றாடம் வேலை கிடைக்கும் என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது.

இந்த நிலையில், இவர்கள் பெற்றுப் போடும் பிள்ளை களுக்குக் கல்வியாவது, வெங்காயமாவது! எத்தகைய சூழலில் அக்குழந்தைகள் வளர்வார்கள் என்பதை எண் ணிப் பார்த்தால் ரத்தக் கண்ணீர்தான் வடிக்க வேண்டி வரும்.அடிதடிகளும், குற்றச் சூழல்களும்தான் இயல்பாக அந்தப் பகுதிகளில் நிலவும் பிரத்தியட்ச நிலைமையாகும்.

தி.மு.க., ஆட்சியில்தான் குடிசை மாற்று வாரியம் என்ற ஒரு புதுத் திட்டம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் அறி முகப்படுத்தப்பட்டது. பல்லாண்டுகளுக்குமுன் கட்டப்பட்ட இந்தக் கட்டடங்கள் இடிந்த நிலையில், புதிதாகக் கட்டித் தரும் உறுதியையும் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அளித்துள்ளார்.

ஒரு பக்கத்தில் நகரம் - கிராம பேதங்கள் என்ற நவீன வருணாசிரம நிலை என்றால், இன்னொரு பக்கத்தில் நகருக்குள் மாட மாளிகைகள் ஒருபுறம், சாலையோரக் குடிசைகள் இன்னொருபுறம்!

இதற்கு முடிவுதான் என்ன? மிகவும் கவலையோடு அணுகவேண்டிய, தீர்வு காணவேண்டிய தீப்பொறி போன்ற பிரச்சினை இதுவாகும். இது வளருமேயானால், `சாலையோரங்களில் வேலையற்றதுகள் - அவர்களின் கண்களிலே விபரீதக் குறி! என்றாரே அறிஞர் அண்ணா. அந்த வரிகள்தான் இந்த நேரத்தில் நினைவுக்கு வருகின்றன - எச்சரிக்கை!

வருமுன் காப்பதுதான் மனிதன் அறிவாளி என்பதற்கான இலக்கணமாகும்.

0 comments: