மியூச்சுவல் பண்ட் சொத்து ரூ.18,000 கோடி சரிந்தது

பங்குச் சந்தை வீழ்ச்சி எதிரொலி...



பங்குச் சந்தையில் கடந்த மாதம் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக இந்திய மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் சொத்து மதிப்பில் ஆகஸ்டு மாதத்தில் ரூ.18,506 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தத் தகவலை இந்திய மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் சங்கம் வெளியிட்டுள்ளது. ஜூலை மாதத்தில் இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்கள் வசமிருந்த சொத்துகளின் மதிப்பு ரூ 4,86,129 கோடி. ஆகஸ்டு மாத இறுதியில் அவற்றின் மதிப்பு ரூ.4,67,623 கோடியாகக் குறைந்துவிட்டது.
வங்கிகளுக்கு இடையே பெறப்படும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி உயர்ந்திருப்பதும் இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட தொடர் சரிவுமே இதற்குக் காரணம் என இத்துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

டாய்ட்ச் வங்கி சொத்து நிர்வாகப் பிரிவில் தலைமை முதலீட்டு அதிகாரியாக இருப்பவர் சுரேஷ் சோனி. வங்கிகளின் கையில் இருந்த உதிரி பணத்தின் அளவு குறைந்துவிட்டது.
பரஸ்பர நிதிக்கு வரும் புதிய முதலீட்டின் அளவு 4 சதவீதம் வரை குறைந்துள்ளது. பங்குச் சந்தையில் குறியீட்டெண் ஏறுவதும் இறங்குவதுமாக இருப்பதால் முதலீட்டாளர்கள் பக்கத்தில் இருந்து வேடிக்கை பார்க்கிறார்கள் என இவர் தெரிவித்தார்.

எல்லா பரஸ்பர நிதிகளின் சொத்தும் குறைந்து போய்விடவில்லை. பல்வேறு கம்பெனிகளின் பங்குகளில் முதலீடு செய்துள்ள பெரிய பரஸ்பர நிதி நிறுவனங்களில் முதலீடு குறையவில்லை. அவை பெற்ற முதலீடுகள் அதிகரித்துள்ளன. ஐசிஐசிஐ புரூடென்ஷியல், ரிலையன்ஸ் மியூச்சுவல், எச்டிஎஃப்சி மியூச்சுவல் ஆகியவற்றின் சொத்து மதிப்புகள் உயர்ந்துள்ளன.

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் சொத்து மதிப்பு ரூ 1923 கோடியும் ரிலையன்ஸ் மியூச்சுவல் சொத்து மதிப்பு ரூ.1,177 கோடியும் எச்டிஎஃப்சி மியூச்சுவல்சொத்து மதிப்பு ரூ.718 கோடியும் உயர்ந்துள்ளன.

இந்த மூன்று பரஸ்பர நிதிநிறுவனங்களும் இந்திய பரஸ்பர நிதிநிறுவனங்கள் வசமுள்ள மொத்த சொத்து மதிப்பில் மூன்றில் ஒரு பங்கை தங்கள் கைகளில் வைத்துள்ளன.

தரவு - தினகரன்

0 comments: