தீ பரவட்டும்!

பா.ஜ.க., ஆட்சிக்கு வந்தால், அந்த ஆட்சியின் கொள்கை குலதர்மமாகத்தானிருக்கும் என்பதற்கு அடையாளம்தான், குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடியால் எழுதப்பட்ட (கர்மயோக்) நூலின் சாரமாகும்.

ஆர்.எஸ்.எஸின் அடிப்படைக் கொள்கையில் வருணாசிரமப் பாதுகாப்பு கெட்டியாக இருக்கிறது. வர்ணவியா வஸ்தா என்பது ஓர் சமூக அமைப்பு என்றும், அதில் ஏற்றத் தாழ்வுகளுக்கு இடம் இல்லை என்றும் ஆர்.எஸ்.எஸின் குருநாதரான கோல்வால்கர் கூறுகிறார்.

இன்னும் பச்சையாக அனைவருக்கும் புரியும்படி ஜாதியை ஆதரித்து வெளிப்படையாகவே எழுதுகிறார்.

நீண்ட காலமாகவே சிலர் ஜாதி அமைப்பை எதிர்த்துப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த ஜாதி அமைப்பு நமது முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக இருந்து வந்தது என்பதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது; உண்மையில் ஜாதி அமைப்பு சமூக ஒற்றுமைக்கு உதவுகிறது என்று ஆர்.எஸ்.எஸின் வேத நூல் என்று போற்றப்படும் நூலில் (Bunch of Thoughts) பச்சையாகவே ஜாதியை, அதன் குலத்தொழில் நிலையை நியாயப்படுத்தி எழுதியுள்ளார்.

அவரைக் குருநாதராகக் கொண்டு வழிபடும் பச்சை ஆர்.எஸ்.எஸ்.,காரரான குஜராத் முதலமைச்சர் திருவாளர் நரேந்திரமோடி குப்பை அள்ளும் தொழிலையும், மலம் எடுக்கும் தொழிலையும், சாக்கடையைச் சுத்தப்படுத்தும் தொழிலையும் ஆதரித்து, அதில் ஈடுபடுகிறவர்கள் மோட்சம் போவர் என்று பேசுவதில் ஆச்சரியம் என்ன?

இந்த 2007 ஆம் ஆண்டிலும் இத்தகைய கடைந்தெடுத்த பிற்போக்குவாதிகள் இருக்கிறார்கள் என்பதை அடையாளம் கண்டு அத்தகைய மனித வெறுப்பாளர்களைத் தோலுரித்துக் காட்ட வேண்டியதுதான் மனித நேயக்காரர்களின் முதலாவதும், முக்கியமானதுமான கடமையாகும். இத்தகைய பிற்போக்கு வாதிகள் அதிகாரத்தில் அமர்த்தப்பட்டால், மனித குலம் கற்காலத் திற்குத்தான் தள்ளப்பட நேரும் என்ற விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைத் திட்டமிட்டுச் செய்யவேண்டும்.

நேற்று (11.12.2007) சென்னையில் - மோடியின் கூற்றை எதிர்த்து திராவிடர் கழகமும், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பும் இணைந்து நடத்திய போராட்டத்தில் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையில் இதுதான் மிளிர்கிறது.
ஒரு குலத்துக்கு ஒரு நீதி சொல்லும் மனுதர்மத்தை தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் எரித்தனர் என்பதையும் தமிழர் தலைவர் எடுத்துக்காட்டியதை, மீண்டும் மக்களின் சிந்தனைப் பார்வைக்கு வெளிச்சமாகக் கொண்டு வந்து காட்டவேண்டும். விழிப்புணர்வு என்பதே சரியான பரிகாரமும், ஆயுதமும் ஆகும்.

இந்தியா முழுமையும் மலத்தை அள்ளித் தலையில் சுமக்கும் எங்கள் சகோதரர்கள் 6 லட்சத்து ஆயிரம் பேர் உள்ளனர் என்கிற புள்ளி விவரத்தை திராவிடர் கழகத் தலைவர் எடுத்து விளக்கினார் - பாதாளச் சாக்கடைகளைச் சுத்தம் செய்யும்பொழுது விஷ வாயு தாக்கி மரணமடைந்தவர்கள் 22,327 பேர்கள் என்றும், இவர்கள் அத்தனைப் பேரும் சேரிவாழ் மக்களாக, தாழ்த்தப்பட்ட மக்களாக இருப்பதை அவர் எடுத்துரைத்ததை நாகரிகம் உள்ள ஒரு சமுதாயம் எண்ணிப் பார்க்கவேண்டாமா? பரிகாரம் தேடிட முனைய வேண்டாமா?

தாழ்த்தப்பட்ட தோழர்கள் இத்தகைய தொழில்களைச் செய்கிறார்கள் என்பதற்காகக் கூட அல்ல - மனிதநேய அடிப் படையில் பார்ப்பனர்கள்கூட இந்தத் தொழிலைச் செய்யக் கூடாது என்பதுதான் எங்கள் கொள்கை என்று திராவிடர் கழகத் தலைவர் சொன்னதை பார்ப்பனர்களும், மோடி போன்ற பார்ப்பனத் தொங்கு சதைகளும் எண்ணிப் பார்க்கவேண்டும். நாங்கள் போராட வந்த நோக்கத்தையும் சிந்திக்கவேண்டும்.

இந்தியாவின் தென்கோடியில் உள்ள தமிழ்நாட்டின் தலைநகரத்தில் நேற்று நடத்தப்பட்ட குலதர்ம எதிர்ப்புப் போராட்டத்தின் வீச்சினை - சாரத்தினை காஷ்மீர் பனிமலை வரை கொண்டு செலுத்தவேண்டியது மிகவும் அவசியமாகும்.

இது ஒரு தீப்பொறிதான் - இது இந்தியாவின் நாலாத் திசை களிலும் பரவட்டும்! பரவட்டும்!!
குஜராத் முதலமைச்சர் எழுதியுள்ள கருத்துக்கூட ஒரு வகை யில் தீண்டாமைக்கான குற்றம்தான். அந்தக் கண்ணோட்டத்திலும் மத்திய அரசு அதனைப் பார்க்கவேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

தரவு - விடுதலை

0 comments: