தீ பரவட்டும்!

பா.ஜ.க., ஆட்சிக்கு வந்தால், அந்த ஆட்சியின் கொள்கை குலதர்மமாகத்தானிருக்கும் என்பதற்கு அடையாளம்தான், குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடியால் எழுதப்பட்ட (கர்மயோக்) நூலின் சாரமாகும்.

ஆர்.எஸ்.எஸின் அடிப்படைக் கொள்கையில் வருணாசிரமப் பாதுகாப்பு கெட்டியாக இருக்கிறது. வர்ணவியா வஸ்தா என்பது ஓர் சமூக அமைப்பு என்றும், அதில் ஏற்றத் தாழ்வுகளுக்கு இடம் இல்லை என்றும் ஆர்.எஸ்.எஸின் குருநாதரான கோல்வால்கர் கூறுகிறார்.

இன்னும் பச்சையாக அனைவருக்கும் புரியும்படி ஜாதியை ஆதரித்து வெளிப்படையாகவே எழுதுகிறார்.

நீண்ட காலமாகவே சிலர் ஜாதி அமைப்பை எதிர்த்துப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த ஜாதி அமைப்பு நமது முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக இருந்து வந்தது என்பதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது; உண்மையில் ஜாதி அமைப்பு சமூக ஒற்றுமைக்கு உதவுகிறது என்று ஆர்.எஸ்.எஸின் வேத நூல் என்று போற்றப்படும் நூலில் (Bunch of Thoughts) பச்சையாகவே ஜாதியை, அதன் குலத்தொழில் நிலையை நியாயப்படுத்தி எழுதியுள்ளார்.

அவரைக் குருநாதராகக் கொண்டு வழிபடும் பச்சை ஆர்.எஸ்.எஸ்.,காரரான குஜராத் முதலமைச்சர் திருவாளர் நரேந்திரமோடி குப்பை அள்ளும் தொழிலையும், மலம் எடுக்கும் தொழிலையும், சாக்கடையைச் சுத்தப்படுத்தும் தொழிலையும் ஆதரித்து, அதில் ஈடுபடுகிறவர்கள் மோட்சம் போவர் என்று பேசுவதில் ஆச்சரியம் என்ன?

இந்த 2007 ஆம் ஆண்டிலும் இத்தகைய கடைந்தெடுத்த பிற்போக்குவாதிகள் இருக்கிறார்கள் என்பதை அடையாளம் கண்டு அத்தகைய மனித வெறுப்பாளர்களைத் தோலுரித்துக் காட்ட வேண்டியதுதான் மனித நேயக்காரர்களின் முதலாவதும், முக்கியமானதுமான கடமையாகும். இத்தகைய பிற்போக்கு வாதிகள் அதிகாரத்தில் அமர்த்தப்பட்டால், மனித குலம் கற்காலத் திற்குத்தான் தள்ளப்பட நேரும் என்ற விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைத் திட்டமிட்டுச் செய்யவேண்டும்.

நேற்று (11.12.2007) சென்னையில் - மோடியின் கூற்றை எதிர்த்து திராவிடர் கழகமும், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பும் இணைந்து நடத்திய போராட்டத்தில் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையில் இதுதான் மிளிர்கிறது.
ஒரு குலத்துக்கு ஒரு நீதி சொல்லும் மனுதர்மத்தை தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் எரித்தனர் என்பதையும் தமிழர் தலைவர் எடுத்துக்காட்டியதை, மீண்டும் மக்களின் சிந்தனைப் பார்வைக்கு வெளிச்சமாகக் கொண்டு வந்து காட்டவேண்டும். விழிப்புணர்வு என்பதே சரியான பரிகாரமும், ஆயுதமும் ஆகும்.

இந்தியா முழுமையும் மலத்தை அள்ளித் தலையில் சுமக்கும் எங்கள் சகோதரர்கள் 6 லட்சத்து ஆயிரம் பேர் உள்ளனர் என்கிற புள்ளி விவரத்தை திராவிடர் கழகத் தலைவர் எடுத்து விளக்கினார் - பாதாளச் சாக்கடைகளைச் சுத்தம் செய்யும்பொழுது விஷ வாயு தாக்கி மரணமடைந்தவர்கள் 22,327 பேர்கள் என்றும், இவர்கள் அத்தனைப் பேரும் சேரிவாழ் மக்களாக, தாழ்த்தப்பட்ட மக்களாக இருப்பதை அவர் எடுத்துரைத்ததை நாகரிகம் உள்ள ஒரு சமுதாயம் எண்ணிப் பார்க்கவேண்டாமா? பரிகாரம் தேடிட முனைய வேண்டாமா?

தாழ்த்தப்பட்ட தோழர்கள் இத்தகைய தொழில்களைச் செய்கிறார்கள் என்பதற்காகக் கூட அல்ல - மனிதநேய அடிப் படையில் பார்ப்பனர்கள்கூட இந்தத் தொழிலைச் செய்யக் கூடாது என்பதுதான் எங்கள் கொள்கை என்று திராவிடர் கழகத் தலைவர் சொன்னதை பார்ப்பனர்களும், மோடி போன்ற பார்ப்பனத் தொங்கு சதைகளும் எண்ணிப் பார்க்கவேண்டும். நாங்கள் போராட வந்த நோக்கத்தையும் சிந்திக்கவேண்டும்.

இந்தியாவின் தென்கோடியில் உள்ள தமிழ்நாட்டின் தலைநகரத்தில் நேற்று நடத்தப்பட்ட குலதர்ம எதிர்ப்புப் போராட்டத்தின் வீச்சினை - சாரத்தினை காஷ்மீர் பனிமலை வரை கொண்டு செலுத்தவேண்டியது மிகவும் அவசியமாகும்.

இது ஒரு தீப்பொறிதான் - இது இந்தியாவின் நாலாத் திசை களிலும் பரவட்டும்! பரவட்டும்!!
குஜராத் முதலமைச்சர் எழுதியுள்ள கருத்துக்கூட ஒரு வகை யில் தீண்டாமைக்கான குற்றம்தான். அந்தக் கண்ணோட்டத்திலும் மத்திய அரசு அதனைப் பார்க்கவேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

தரவு - விடுதலை

அஸ்த்ரேலியா செல்லும் இந்திய டெஸ்ட் அணி

India's Test squad for Australia

Wasim Jaffer, Virender Sehwag, Dinesh Karthik, Rahul Dravid, Sachin Tendulkar, Sourav Ganguly, VVS Laxman, Yuvraj Singh, Mahendra Singh Dhoni (wk), Anil Kumble (capt), Harbhajan Singh, Zaheer Khan, RP Singh, Irfan Pathan, Ishant Sharma, Pankaj Singh.

குஜராத் சட்டசபை தேர்தலில் 60 சதவீத ஓட்டுப்பதிவு

குஜராத் மாநில சட்டசபைக்கான முதல் கட்ட ஓட்டுப்பதிவு இன்று மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. . குஜராத் மாநில சட்டசபைக்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக, 87 தொகுதிகளுக்கு இன்று காலை முதல் ஓட்டுப்பதிவு தொடங்கி நடந்து வந்தது. இதிதேர்தலில் 60 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த தேர்தலில் ஆண்களை விட பெண்களை அதிகளவில் ஓட்டளித்துள்ளனர். இரண்டாம் கட்டமாக 92 தொகுதிகளுக்கு வரும் டிசம்பர் 16ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.


தரவு-தினமலர்

அய்.அய்.டி.,யா- அக்கிரகாரமா?

அய்.அய்.டி.,களில் (IIT) இட ஒதுக்கீடு என்பதைப்பற்றித் தெரிந்துகொள்ள தமிழ் நாட்டைச் சேர்ந்த பிஎச்.டி., பட்டம் பெற்ற எத்திராஜ் முரளிதரன் என்பவர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் விண்ணப்பம் செய்தார். அய்.அய்.டி.,களில் ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படுவதில்லை என்கிற தகவல் கிடைத்திருக்கிறது.

அய்.அய்.டி.,களில் தகுதி அடிப்படையில்தான் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்றும், அதற்கான ஆணையிருக்கிறது என்றும் அய்.அய்.டி., தரப்பில் கூறப்பட்டாலும், அத்தகு ஆணை எதுவும் கிடையாது என்று மனித வள மேம்பாட்டுத் துறை தெரிவித்துள்ளதாக தினமலர் ஏடே கூறுகிறது.

அப்படியானால், அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக அய்.அய்.டி., செயல்பட்டு வருகிறது என்றுதானே பொருள்?

இதன்மீது மனித வள மேம்பாட்டுத் துறை அய்.அய்.டி., இயக்குநர் மற்றும் நிருவாகத்தின்மீது சட்டப்படியான நடவடிக்கையை எடுக்கவேண்டாமா? இந்தப் பிரச்சினையில் மனித வள மேம்பாட்டுத் துறை ஏன் தயக்கம் காட்டுகிறது?

சென்னை - அய்.அய்.டி.,யை எடுத்துக்கொண்டால் ஆசிரியர்களில் பார்ப்பனர்களின் எண்ணிக்கை 282 (70 சதவிகிதம்), முன்னேறிய ஜாதியினர் 40 (10 சதவிகிதம்), பிற்படுத்தப்பட்டோர் 57 (14 சதவிகிதம்), தாழ்த்தப்பட்டோர் 3 (0.75 சதவிகிதம்), கிருத்தவர் 15 (3 சதவிகிதம்), சமணர்கள் 3 (0.75 சதவிகிதம்), முசுலிம்கள் பூச்சியம்.

இந்தியா முழுமையும் அநேகமாக இந்த நிலைதான்.

நூற்றுக்கு மூன்று சதவிகித எண்ணிக்கையில் உள்ள பார்ப்பனர்கள் இப்படி முழுச்சுளையையும் விழுங்கிக் கொண்டு இருக்கிறார்கள். உயர்தரக் கல்வி நிறுவனம் என்று சொல்லப்படுகின்ற கல்வி நிறுவனங்களில் இந் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் புறக்கணிக்கப் படுகின்றனர் என்றால், இந்தக் கொடுமையை அனு மதிக்கலாமா? ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்ச்சி இல்லை என்று இதற்குப் பொருளா?

சென்னை - அய்.அய்.டி.,யில் உள்ள இயக்குநர் ஆனந்த் என்ற பார்ப்பனருக்குப் பதவி நீட்டிப்பு அளிக்கப் பட்டுள்ளது. இந்த ஆசாமி பொறுப்பேற்ற காலந்தொட்டு பச்சை அக்கிரகாரத்தனம் தலை கொழுத்துத் தாண்டவமாடுகிறது.

பல்வேறு குளறுபடிகளைச் செய்துகொண்டு இருக்கும் இவரை எதிர்த்து ஏராளமான வழக்குகள் உயர்நீதிமன் றத்தில் நிலுவையிலும் உள்ளன. போராட்டங்களும் நடைபெற்று இருக்கின்றன. என்ன நடந்தாலும், எதுவும் நடக்காததுபோல, கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் ராஜ நடைபோட்டுத் திரிகிறார் இவர் என்றால், இதனை அனுமதிக்கலாமா?

டில்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் இப்படித்தான் வேணுகோபால் என்ற பார்ப்பனர் திமிர் முறித்துக் கொண்டு இருந்தார். உச்சநீதிமன்றம் வரை அவருக்கு முட்டுக் கொடுத்துப் பார்த்தது; இப்பொழுது வெளி யேற்றப்பட்டுவிட்டார் - ஒரு சட்டத்தின்மூலம். அதைவிட மோசமான பரிபாலனம் சென்னை - அய்.அய்.டி.,யில் கொடிகட்டிப் பறக்கிறது. இதற்கு எப்பொழுதுதான் முடிவு?

பல ஆண்டுக்காலமாக இட ஒதுக்கீடு புறக்கணிக்கப் பட்டதால், நூற்றுக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்கள் பாதிக்கப்படவில்லையா? அந்த இழப்புக்கு என்ன பரிகாரம்?
இனிமேலும் இந்த அநீதி தொடரலாமா?

நாடாளுமன்ற உறுப்பினர்கள் - குறிப்பாக தமிழ் நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் அக்கறை காட்டுமாறு வலியுறுத்துகிறோம்.


தரவு - விடுதலை

எவனோ ஒருவன் - திரை விமர்சனம்

பிளாட்பார கடைகளை விடவும் மலிவான சரக்குகள் விற்கப்படும் கோலிவுட்டில், எப்போதாவது ஐ.எஸ்.ஐ சரக்குகளும் எட்டிப்பார்க்கும். இந்த படம் அந்த வரிசையில் சேர்த்தி. முதல் காட்சியே இயக்குனர் நிஷிகாந்தின் கௌரவத்தை சொல்லும் அசத்தலான தோரணவாயில்! வேலைக்கு கிளம்பும் மாதவன், மகளுக்கு முத்தம் கொடுக்கிற நேரத்தில் பின்னணியில் ஒலிக்கும் ரயிலின் சப்தமும், திரும்ப திரும்ப வரும் ஒரே காட்சியில் ஒரே மாதிரியான வாழ்க்கை சுழற்சியால் சலிப்புக்குள்ளாகி கிடக்கும் ஹீரோவின் மனசையும் அழகாக வெளிப்படுத்தி விடுகிறார். அந்த மனசுக்குள் இராணுவ கம்பீரத்தோடு ஒரு அகிம்சை அரசன் புகுந்துவிட, நடக்கிற களேபரங்கள்தான் கதை.

வங்கியில் வேலை பார்க்கும் மாதவனுக்கு ரயிலில் ஜன்னலோர சீட்டை பிடித்து அலுவலகத்திற்கு போய் சேருவதே பெரிய சவால். தன்னை சுற்றி நடக்கிற சின்ன சின்ன அநியாயங்களை தட்டிக் கேட்க முடியாத அளவுக்கு சூழ்நிலை சோகங்கள். தண்ணீர் லாரிக்காரனை கூட கண்டிக்க முடியாத அளவுக்கு வேகத்தடை வாழ்க்கை. நல்ல ஸ்கூலில் பிள்ளையை சேர்க்க வேண்டும் என்றால், டொனேஷன் நிர்பந்தங்கள். மனைவி சங்கீதாவின் ஒருசொல் மாதவனுக்கு மதம் பிடிக்க வைக்கிறது. பிறகென்ன, வெண்கலக்கடைக்குள் புகுந்து துவம்சம் செய்வது மாதிரி செய்கிறார் சுற்றி நடக்கிற அவலங்களை. கணவனுக்கு மனநோய். கலங்கிப் போகிற மனைவியால் எதுவும் செய்ய முடியாத சூழ்நிலையில், தீவிரவாதியாக கருதப்படும் அவனை என்ன செய்கிறது போலீஸ்? பல இடங்களில் பின்னணி இசையே மௌனமாகி போகிற அளவுக்கு, மனசை பிசைந்து வணக்கம் போடுகிறார்கள்.

இரண்டு ரூபாய் அதிகம் வாங்கும் கூல் டிரிங்ஸ் கடைக்காரனையும், அவன் கடையையும் துவம்சமாக்கும் மாதவனின் ஆக்ரோஷம், மெல்ல மெல்ல துப்பாக்கி லெவலுக்கு உயர்வது எதார்த்தமாக சொல்லப்பட்டிருக்கிறது. சிறிய பிரச்சனைதான் என்றாலும் தண்ணீர் லாரிக்காரனின் அலட்சியத்திற்கு அவர் கொடுக்கிற தண்டனை நரம்பை முறுக்கேற்றுகிறது. மருத்துவமனையில் அவர் கேட்கிற கேள்விகளில் இருக்கிற நியாயம் சாமானிய மக்களின் அன்றாட அறிக்கை! கையில் கிரிக்கெட் பேட் ஒன்றை எடுத்துக் கொண்டு அவர் நடக்கிற ராஜநடை பயங்கரம்.

பட்டுப்புடவையின் சரிகை மாதிரி மாதவனின் கேரக்டர் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இரண்டு ரூபாய்க்கு சண்டை போடுகிற கஞ்சன் அல்ல என்பதை, பிளாட்பார சிறுவனிடம் அவர் காட்டுகிற தாராளம் உணர்த்துகிறது. நட்ட நடுநிசியில், அதுவும் நடுரோட்டில் நின்று கொண்டு அண்ணாந்து பார்த்தபடி, இறைவனுக்கு கடிதம் எழுதும் மாதவனின் நடிப்பிற்கு கொஞ்சமும் குறைந்ததல்ல அவரே எழுதியிருக்கும் வசனங்கள். மகளின் புகைப்படத்தை பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டு வருகிறாரே மாதவன், அங்கேதான் க்ளைமாக்சில் நடக்கும் விபரீதத்தை இன்னும் அழுத்தமாக பதிய வைத்திருக்கிறார்கள்.

மனைவியாக உயிர் சங்கீதா. இந்த பத்து வருடத்தில் என்ன சுகத்தை கண்டேன்? என்று புலம்பும் லட்சத்து ஓராவது மனைவி. அவரை தடுத்து நிறுத்தியிருந்தா இதெல்லாம் நடந்திருக்காது என்று அழுது புலம்பி பரிதாபத்தை சேர்த்துக் கொள்கிறார்.

காவல் அதிகாரிகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கம்பீரமாக உணர்த்தியிருக்கிறார் சீமான். பெண்களிடம் போலீஸ் விசாரணை எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு அவர் சங்கீதாவிடம் நடத்தும் விசாரணை உதாரணம். பேசாம என்னுடைய காக்கி சட்டையை கழற்றி அவனை போட்டுக்க சொல்லலாம்னு தோணுது என்கிறபோது கைத்தட்டல்களில் அதிர்கிறது தியேட்டர். தன்னுடைய தமிழ் பற்றை தூய தமிழ் வசனங்களாலும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

பல காட்சிகளில் மௌனத்தையே இசையாக்கி அழகு சேர்த்திருக்கிறார் பி.சமீர். பின்னணி இசையோடு ஒளிப்பதிவும் கைகோர்த்து கொள்ள... நடுநிசியும், அரையிருட்டும் சொல்கிற சங்கதிகள் அநேகம். ஒளிப்பதிவாளர் சஞ்சய் யாதவ் பிரமிக்க வைத்திருக்கிறார். ஒரு பாடலுக்கு மட்டும் இசையமைத்திருக்கிறார் ஜி.பி.பிரகாஷ். பெரிதாக ஒன்றுமில்லை.

மீடியாவின் அவசியங்களை சொல்கிற அதே நேரத்தில், அவைகளின் அவசரங்களையும் சொல்லியிருக்கிறார் இயக்குனர். ஒரே நேரத்தில் பல சேனல்காரர்களின் அறிவிப்புகள் மக்களுக்கு தலைச்சுற்றலையே ஏற்படுத்தும் என்பதையும் ஒரே பிரேமில் வெளிப்படுத்துகிறார். இப்படி சின்ன சின்ன நகாசு வேலைகள் இயக்குனரின் புத்திகூர்மைக்கு வெளிச்சம் போடுகிறது.

தமிழ்சினிமாவை தூர்வார, 'எவனோ வருவான்' என்று நம்பியிருந்தோமல்லவா?அவன்,

வந்துட்டான்...!

-ஆர்.எஸ்,அந்தணன்

புதிய கட்சி தொடங்க நடிகர் சிரஞ்சீவி முடிவு

ஆந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி புதிய கட்சி தொடங்க முடிவு செய்துள்ளார். வரும் புத்தாண்டு தினத்தில் இதற்கான அறிவிப்பை அவர் வெளியிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆந்திராவில் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் தனிப்பெரும் சக்திகளாக உள்ளன. தேர்தல் சமயத்தில் இவைகளுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளாக பா.ஜ.க., தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளன. இதற்கு மாற்றாக 3-வது பெரும் சக்தியாக உருவெடுக்க நடிகர் சிரஞ்சீவி முடிவு செய்திருப்பதாகவும், இதன் பொருட்டு புதிய கட்சியை தொடங்கும் முடிவுக்கு அவர் வந்திருப்பதாகவும் அவரது நெருங்கிய நண்பர் வட்டாரங்கள் தெரிவித்தன.

நடிகர் சிரஞ்சீவி பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். உ.பி.யிலும், பீகாரிலும் எண்ணிக்கையில் அதிகமாக உள்ள பிற்படுத்தப்பட்ட யாதவர்களுக்கு ஆதரவாக தொடங்கப்பட்ட சமாஜ்வாடியும், ராஷ்டிரிய ஜனதாதளமும் எப்படி மக்களின் அமோக ஆதரவை பெற்று ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு வளர்ச்சியடைந்ததோ அதே போல் சிரஞ்சீவியின் கட்சியும் மாபெரும் சக்தியாக உருவெடுக்கும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதுதொடர்பாக சிரஞ்சீவி தனக்கு நெருக்கமான அரசியல் தலைவர்கள் மற்றும் அறிவு ஜீவிகளிடம் ஆலோசனை செய்ததாகவும், அவரது மனதில் இருந்த குழப்பங்கள் அனைத்தும் தற்போது விலகி விட்டதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

சந்திரபாபு நாயுடுவுக்கு நெருக்கமானவர் என கருதப்பட்ட சிரஞ்சீவி தற்போது அரசியலில் குதிக்க முடிவு செய்திருப்பது தெலுங்கு தேசம் வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் லேடி சூப்பர் ஸ்டாராக கருதப்படும் விஜயசாந்தி ஆரம்பித்துள்ள கட்சி எவ்வித தாக்கத்தையும் ஆந்திர அரசியலில் ஏற்படுத்தாத நிலையில் சிரஞ்சீவி எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பது அடுத்த தேர்தலில் தான் தெரியும் என ஐதராபாத் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

"ராமேஸ்வரம்" - விமர்சனம்


ராமேஸ்வரத்துக்கு வரும் இலங்கை அகதிகளுக்கு இடம் தந்து உதவுகிறார் உள்ளூர் பெரும்புள்ளி லால். சொந்த நாட்டுக்கு திரும்பும் முயற்சியில் இருக்கும் அகதி ஜீவாவை, காதலிக்கிறார் அவர் மகள் பாவனா. இதை லாலும் பாவனாவின் முறைமாமன் போஸ் வெங்கட்டும் எதிர்க்கிறார்கள். முடிவில் காதல் ஜெயித்ததா என்பது க்ளைமாக்ஸ்.

வழக்கமான காதல் எதிர்ப்புதான் கதை. இலங்கை அகதியின் பின்னணியில் அதை சொல்லியிருப்பதும், அவர்களின் வலிகளை இன்னொரு பரிமாணத்தில் காட்டியிருப்பதும் புதிது.

அகதிகளாக ராமேஸ்வரத்துக்கு கூட்டம் வரும்போது, இலங்கை பிரச்னையை இயக்குனர் தொடப்போகிறார் என நினைத்தால் புஸ். அடுத்தடுத்து வரும் காட்சிகள் காதலை மட்டுமே மையப்படுத்தி செல்கிறது. ஜீவாவை கண்டதுமே காதல் வயப்படும் பாவனா, துரத்தி துரத்தி காதலிக்கிறார்.

"இலங்கைக்கு போனால் ஒரு நாள்கூட உன்னால வாழ முடியாது" என ஜீவா கூற, "சாகவும் தயார்" என்கிறார் பாவ்ஸ். அந்த அளவுக்கு பாவனாவின் காதல் வலுவானது எனக்கூறும் இயக்குனர் அதை காட்சிகளில் விளக்கத் தவறியிருக்கிறார். கேரக்டருக்காக தன்னை வருத்திக்கொள்ளும் ஜீவாவா இது? ஒரே காட்சியில் இலங்கை தமிழையும் லோக்கல் தமிழையும் கலந்து பேசுகிறார். ஒரு காட்சியில் பாவனா காதலை ஏற்றுக்கொள்வதும் இன்னொரு காட்சியில் அவரிடமிருந்து ஒதுங்கிப்போவதும் கிளைமாக்சில் "காதலுக்காக வரல. உன் உயிரை காப்பாத்ததான் வந்தேன்" எனச்சொல்லும்போதும் ஏற்கவும் முடியாமல் விலகவும் முடியாமல் அவர் தவிப்பது அழகான கவிதை.

படம் முழுவதும் வந்தாலும் பாவனாவின் நடிப்பை தேட வேண்டியிருக்கிறது. சொந்த மண்ணில் சொந்தங்களை இழந்த மணிவண்ணன், ‘மிஞ்சியிருப்பது பேரன் ஜீவாதான்; அவனை இலங்கைக்கு அனுப்ப மாட்டேன்’ என உருகும் போது மனதில் ஆணியடிக்கிறார். "தீபாவளி"யில் பார்த்த அதே வேடத்தில் லால். பாவனாவின் முறைமாமன் வெங்கட்டின் வில்லத்தனம் ரசிக்கலாம். ஜீவாவை வெங்கட் கைது செய்யும்போது, "நீங்க சொல்லும் நேரத்துல ஜீவா என்கூடத்தான் படுத்திருந்தார்" என பாவனா சொல்வது காட்சிக்கு கனம்.

வெங்கட்- ஜீவா மோதும் அந்த சண்டைக் காட்சி, மினி த்ரில். குருதேவ், வெற்றியின் ஒளிப்பதிவு கச்சிதம். நிருவின் இசையில் கபிலன் எழுதிய "எல்லோரையும் ஏற்றிப் போக கப்பல் வருமா" பாடலில் ஆழம். பின்னணி இசையில் இளையராஜாவின் பழைய படங்களை ஞாபகப்படுத்துகிறார். பாவனாவின் போட்டோவுக்கு பின்னால் கல்யாண தேதியை எழுதியிருக்க, அதை பார்க்கும் போலீசார் அன்றைய தினம் ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகிறது என கணிக்கிறார்கள். இந்த மாதிரி படத்த¤ல் வரும் பல சீரியஸ் காட்சிகள் காமெடியாக தெரிகிறது.

தரவு - தமிழ்முரசு